தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் முறை அரசியலாக்கப்படலாம் என்றும் பழைய முறையான நியமிக்கப்பட்ட அதிபர் முறை யைப் பின்பற்றுவதே சிறப்பு என்றும் நாடாளுமன்றத்தில் கூறினார் பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த திரு லியோன் பெரேரா. இத்துடன், புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் புதிய முறை பின்பற்றப்படுவதற்கான காரணங்களைத் தெளிவுப்படுத்தவில்லை என்றும் கூறிய திரு பெரேரா, "எந்த முறையைக் கையாண்டாலும் அரசியலாக்கப்படும் விளைவைக் குறைக்க முடியாது," என்றார்.
இதற்குப் பதிலளித்த துணைப் பிரதமர் டியோ சீ ஹியன், "அனைத்து முறையிலும் அரசியலாக்கப்படுவதற்கான அபாயம் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறோம். எனினும் எப்படி அதைக் குறைப்பது என்பதில் அரசாங்கமும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது," என்று திரு சானின் சார்பாகப் பதிலளித்தார். இறுதியாக, மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு எதிராக பாட்டாளிக் கட்சியினர் தங்கள் நிராகரிப்பை நாடாளுமன்றப் பதிவேட்டில் பதிவுசெய்யும்படி நாடாளுமன்ற நாயகரைக் கேட்டுக்கொள்ளும் வகையில் ஒருமனதாகக் கைகளை உயர்த்தினர்.