சிங்கப்பூரில் ஒருங்கிணைந்த கலாசாரத்தை வளர்ப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து கைகோர்க்க வேண்டும் என்று நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். "பலஇன மக்களின் பன்முகத்தன்மையும் பெண்களுக்கான சமத்துவமும் சிங்கப்பூரில் இயற்கையாகவே உள்ளதைப்போல் நமக்குத் தோன்றலாம். ஆனால் முறையான திட்டமிடலின் வழியே இவை கிடைத்துள்ளன.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் பலஇன மக்களை ஒருங்கிணைக்கும் சட்ட திட்டங்களுடன் அரசாங்கத்தின் பல்வேறு சமூக நிகழ்ச்சிகளுமே ஆகும். இருப்பினும் சட்டத்தால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிட முடியாது. ஒருவருக்கொருவர் கடுமையான சொற்களால் காயப்படுத்திக்கொள்வதைச் சட்டத்தின்மூலம் தவிர்க்கலாம். ஆனால் பலஇன மக்கள் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்துவதோடு உதவிக்கொள்ளும் மனப்பான்மையைச் சட்டத்தால் உருவாக்கிவிட முடியாது," என்றார். அனைத்துலக மகளிர் கருத்தரங்கு ஏற்பாடு செய்திருந்த மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய திருமதி ஹலிமா யாக்கோப் இதனைத் தெரிவித்தார்.