சிலோன் ரோட்டில் இருக்கும் செயின்ட் ஹில்டாஸ் தேவாலயத்தில் உள்ள ஓர் அறையில் தீ மூட்டியதாகக் கூறப்படும் ஒரு 60 வயது ஆடவர் மீது நேற்று தீ மூட்டி குறும்புத்தனம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இயோ லியாங் சாய் என்ற அந்த ஆடவர், ஏப்ரல் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.45 மணிக்கும் 6.50க்கும் இடையில் அந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இயோ, மத்திய போலிஸ் பிரிவில் விசாரணைக் காவலில் வைக்கப்படுவார். அவரிடம் போலிஸ் புலன்விசாரணை நடத்தக்கூடும். இயோ சார்பில் நேற்று நீதிமன்றத்தில் யாரும் முன்னிலையாகவில்லை. அடுத்த செவ்வாய்க்கிழமை அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.
அந்தத் தேவாலயத்தின் ஓர் அறையிலிருந்து கரும்புகை கிளம்பியதாக ஞாயிறு காலை 7 மணிக்குத் தனக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்து இருந்தது. பல தீயணைப்பு வாகனங்களையும் மருத்துவ வாகனத்தையும் சம்பவ இடத்திற்கு இந்தப் படை அனுப்பியது. தேவாலய தீயைக் குடிமைத் தற்காப்புப் படை அணைத்தது. அதில் யாருக்கும் காயமில்லை.
தீ மூட்டி குறும்புத்தனம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இயோ லியாங் சாய் (நடு). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்