விமான நிலையத்தில் 'போர்டிங் பாஸ்' கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் சீன நாட்டவரான 33 வயது சாங் லிஹுயி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிகாரி மீது அறிவிப்பு அட்டையைத் தூக்கி எறிந்தார். காயப்படுத்திய குற்றத்தை நேற்று நீதிமன்றத்தில் சாங் ஒப்புக்கொண்டார். அவருக்கு 24 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது தண்டனை பின்தேதி இடப்பட்டு, அவர் ஜூலை 1ஆம் தேதி அன்று விடுதலையாவார். சாங் கடந்த ஜூன் 11ஆம் தேதி சாங்கி விமான நிலையத் தில் தமது எஸ்ஐஏ விமான நுழைவுச் சீட்டைப் பெறச் சென் றார். அவர் தமது குடும்ப உறுப்பினரின் கடன் அட்டையைப் பயன்படுத்தி அந்த நுழைவுச் சீட்டை வாங்கியிருந்தார்.
தமது கடவுச்சீட்டையும் அந்த கடன் அட்டையையும் சாங் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிகாரி குமாரி ஷரின் சான் சுவெட் கெக்கிடம், 30, கொடுத்தார். ஆனால் கடவுச்சீட்டிலும் கடன் அட்டையிலும் உள்ள பெயர்கள் ஒத்து இல்லாததாலும் கடன் அட்டையைப் பயன்படுத்த அந்த உறுப்பினர் அனுமதித்த தற்கான ஆதாரக் கடிதம் இல்லாததாலும் 'போர்டிங் பாஸ்' கொடுக்க முடியாது என குமாரி சான் கூறினார். உறவினரை சீனாவில் உள்ள எஸ்ஐஏ அதிகாரியைத் தொடர்புகொண்டு, கடன் அட்டையைப் பயன்படுத்த அனுமதித்த உறுதிப்படுத்தச் சொல்லுமாறு குமாரி சான், சாங்கிடம் கூறினார்.
ஆனால் தம்மிடம் கைபேசி இல்லை என்று கூறிய சாங், குமாரி சானை தகாத வார்த்தைகளால் திட்டினார். அவருக்கு விளக்க வந்த மற்றொரு அதிகாரியையும் சாங் திட்டினார். பின் அவர் நுழைவுச்சீட்டுக்கான பணத்தைத் திருப்பிக்கேட்டார். அதற்கு 2 முதல் 3 வாரங்கள் வரை ஆகுமென குமாரி சான் கூறியதும் சாங்கின் கோபம் அதிகரித்தது. 'கவுன்டர் குளோஸ்' என்று எழுதப்பட்ட 26 செ.மீட்டர் நீளமும் 6 செ.மீட்டர் அகலமும் கொண்ட அறிவிப்புப் பலகையை எடுத்து குமாரி சான் மீது சாங் வீசினார். அதனால் குமாரி சானின் இடது புருவத்திலும் மூக்கிலும் வெட்டு ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. மறுநாள் சாங் அவரது ஹோட்டலில் கைது செய்யப்பட்டார்.