டெக் வை கிரசெண்ட் புளோக் 165Aயிலிருந்து நேற்று முன்தினம் காலை சுமார் 8 மணிக்கு ஒரு மின்-ஸ்கூட்டர் தூக்கி எறியப்பட்ட சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்செயலை கண்மூடித்தனமான செயல் என போலிசார் வகைப்படுத்தியுள்ளனர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது. மாடியிலிருந்து வீசப்பட்ட அந்த மின்-ஸ்கூட்டர் சாலையில் சென்றுகொண்டிருந்த லாரியின் மீது விழுந்தது என்று ஷின் மின் சீன நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
இச்சம்பவத்தில் லாரி ஓட்டுநருக்கு காயம் எதுவும் ஏற்பட வில்லை என்று அறியப்படுகிறது. அந்தப் பகுதியில் வசிக்கும் 51 வயது திருவாட்டி சென், "ஒரு பலத்த சத்தம் கேட்டு நான் அதிர்ச்சியுற்றேன். என் சன்னலிலிருந்து எட்டிப் பார்க்கையில் முன் கண்ணாடி நொறுங்கியிருந்த லாரி ஒன்றையும் அதன் பக்கத்தில் மின்- ஸ்கூட்டர் ஒன்றையும் கண்டேன்," என்றார்.