சிங்கப்பூரிலிருந்து ஊபர் நிறுவனம் வெளியேறியதைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய இரண்டு வாடகை வாகன முன்பதிவு நிறுவனங்கள், இப்போது கூட்டாகச் சேர்ந்து கிராப் போன்ற போட்டி நிறுவனங்களுக்கு எதிராக தங்கள் ஆற்றலைக் கூட்டியிருக்கின்றன. இந்தியாவில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் ஜுக்னூ நிறுவனம், இந்த மாத முடிவில் தன்னுடைய சிங்கப்பூர் செயலியை முடித்துக்கொள்கிறது. ஆனாலும் அது உள்ளூர் நிறுவனமான கார்டியுடன் சேர்ந்து செயல்படவிருக்கிறது. தன்னுடைய தொழில்நுட்ப ஆற்றலையும் பொறியியல் ஆதரவையும் கார்டிக்கு அந்த நிறுவனம் தரவிருக்கிறது.
ஜுக்னூ நிறுவனம் 2014ல் இந்தியாவில் தொடங்கப் பட்டது. இந்தியாவில் ஆட்டோ ரிக்ஷா தொழில்துறையில் அந்த நிறுவனம் சிறப்பு கவனம் செலுத்துகிறது. சிங்கப்பூரில் 2018ல் தொடங்கப்பட்ட அந்த நிறுவனம், இங்கு உள்ளூர் வாகன ஓட்டுநர்களை வேலையில் சேர்க்க பெரும் சவால்களை எதிர்நோக்கியது. கார்டி நிறுவனத்தை அஸ்வின் செலம்பரம் என்ற தொழிலதிபர் 2018 ஜூன் மாதம் தொடங்கினார். ஊபர் நிறுவனம் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து 2018 மார்ச்சில் வெளியேறியதையடுத்து பல நிறுவனங்கள் வாடகை வாகன முன்பதிவுச் சேவைப் போட்டியில் குதித்துள்ளன.