சிங்கப்பூரில் குறைந்தது மூவருக்கு 'சி. ஒரிஸ்' என்ற உயிர்க்கொல்லிக் கிருமி தொற்றியதாகத் தகவல் வெளிவந்துள்ளது. சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் அம்மூவரும் சிகிச்சை பெற்றதாக மருத்துவமனை தெரிவித்தது. அம்மூவரில் ஒருவர் குணமடைந்தார். மற்றொருவர் மருத்துவ ஆலோசனையைப் புறக்கணித்து சிங்கப்பூரைவிட்டு வெளியேறினார். மூன்றாமவர் அந்நோயால் உயிரிழந்தார்.
'சி. ஒரிஸ்' நோய் அவர்களுக்கு இருப்பது தெரிய வந்ததை அடுத்து, சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை அவர்களைத் தனிமைப்படுத்தியதாக அந்த மருத்துவமனையின் நோய்ப்பரவல், நோய்த்தொற்றுத் தடுப்புப் பிரிவின் இயக்குநர் டாக்டர் லிங் மொய் லின் தெரிவித்தார்.
இந்த நோய் தொற்றிய முதல் சிங்கப்பூரர் 52 வயது பெண் ஒருவர். 2012ஆம் ஆண்டில் இந்தியாவில் சாலை விபத்துக்குள்ளாகி அவருக்கு எலும்பு முறிவு காயங்கள் ஏற்பட்டன. அந்தக் காயங்களில் 'சி. ஒரிஸ்' கிருமி இருந்ததாக சிங்கப்பூரில் செய்யப்பட்ட சோதனைகள் வழி தெரிந்தது. முறையாக சிகிச்சை செய்யப்பட்ட பிறகு அவர் வீடு திரும்பினார்.
இரண்டாம் நபர், 24 வயது பங்ளாதேஷி ஆடவர். 2016ஆம் ஆண்டில் அவர் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு வந்தார். சொந்த நாட்டில் புற்றுநோய்க்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவரது ரத்தத்தில் சி. ஒரிஸ்' கிருமி இருப்பது சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் தெரிய வந்தது.