ஊட்ரம் வட்டாரத்தில் 'பெர்ல் பேங் அபார்ட்மண்ட்ஸ்' கட்டடம் தற்போது உள்ள இடத்தில் அதற்குப் பதிலாகப் புதிதாக அமையவிருக்கும் கூட்டுரிமை அடுக்குமாடி வீட்டுக் கட்டடத்தின் வடிவம் வெளியிடப்பட்டுள்ளது. வளைவாக இருக்கும் இரண்டு உயர்மாடி கோபுரக் கட்டடங்கள், அவற்றை இணைக்கும் ஆகாயப் பாலங்கள் போன்றவற்றைக் காட்டுகிறது புதிய வடிவம்.
'ஒன் பெர்ல் பேங்' என்பது இந்தக் கட்டடத்தின் பெயராக இருக்கப்போகிறது. இந்த வடிவம், பழைய வடிவின் மாறுபட்ட அம்சத்தை முன்னெடுத்துச் செல்வதாக அந்தக் கட்டடத்தை வடிவமைத்த டாக்டர் கிறிஸ்டபர் லீ 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
உயர்த்தப்பட்ட தரைத்தளத்தில் இடைவெளிகளை அமைக்கும் மரபு நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்ததாக டாக்டர் லீ குறிப்பிட்டார். 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன ஓவியர் லி செங்கின் ஆலய வடிவமைப்பை அவர் சுட்டினார். இந்த 39 மாடிக் கட்டடத்தில் 774 வீடுகள் இருக்கும். இந்த எண்ணிக்கை, பழைய கட்டடத்தில் உள்ள 288 வீடுகளைக் காட்டிலும் மூன்று மடங்கிற்கு மேல் அதிகம். ஸ்டுடியோ அடுக்குமாடி வீடுகள் முதல் 'பென்ட்ஹவுஸ்' வகை வீடுகள் வரை அமைக்கப்படும்.