தெம்பனிஸ் பள்ளியிலிருந்து மதிப்புமிக்க பொருட்களைத் திருடிய சந்தேகத்தின்பேரில் மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 15, 16 வயதுகளில் இருக்கும் அவர்கள் விசரணையில் உதவி வருவதாக போலிசார் நேற்று தெரிவித்தனர்.
தெம்பனிஸ் ஸ்திரீட்டில் அமைந்திருக்கும் பள்ளியிலிருந்து பணமும் கைபேசி 'ஹெட்ஃபோன்' ஒன்றும் காணாமல்போனதென கடந்த புதன்கிழமை காலை 11.50 மணியளவில் தெரிவிக்கப்பட்டதாக போலிஸ் கூறியது. அந்தச் சம்பவத்துக்கு முன்பாக ஊழியர் ஒருவரின் வேலை அடையாள அட்டை காணாமல்போனதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த அட்டையைப் பயன்படுத்தி சிறுவர் மூவரும் பள்ளியின் அலுவலகத்துக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது. பிடோக் போலிஸ் பிரிவு அதிகாரிகள் அந்த மூவரின் அடையாளங்களைக் கண்டுபிடித்து சம்பவம் நடந்த அன்றே அவர்களைக் கைது செய்தனர். அனுமதி இன்றி நுழைந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை, $1,500 வரை அபராதம் ஆகியன விதிக்கப்படலாம். திருடியது நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்.