தனது திருமண வாழ்க்கையின் மீது சந்தேகத்தை கிளப்பிய மாமியார் மீது கடுங்கோபம் கொண்டு அவரைக் கத்தியால் தாக்கிய 23 வயது மருமகள் நூருல் நட்டாஷா சஸாலிக்கு நேற்று எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புக்கிட் பாத்தோக்கில் உள்ள அடுக்குமாடி வீட்டில் 68 வயது மாமியார் திருவாட்டி ஃபத்திமா கலந்தர் மஸ்தானை நூருல் தாக்கினார். அதனால் ஃபாத்திமாவுக்கு முதுகு, இடது முழங்கையில் காயங்கள் ஏற்பட்டு மருத்துவ மனையில் இரண்டு நாள் சிகிச்சை முடிந்து டிசம்பர் 31ஆம் தேதி வரை மருத்துவ விடுப்பில் இருந்தார்.
ஃபாத்திமா தனது மருமகளை மன்னித்து விட்டார் என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. நூருல் இப்போது $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜூன் மாதம் 7ஆம் தேதி அவர் தண்டனையை நிறைவேற்ற தொடங்குவார்.
தனது மனைவி மற்றொருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்த நூருலின் கணவர் அகம்மது ஹாஜி ஷாருல் ஹமீது தனது தாயாரிடம் அது குறித்து தன் மனைவியுடன் பேசச் சொன்னார். அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நூருல் சமைலறையில் இருந்த 17 சென்டி மீட்டர் கத்தியை எடுத்து மாமியாரைத் தாக்கினார்.