1969ஆம் ஆண்டு மே 31 அன்று, மலேசியாவின் இனக் கலவரம் சிங்கப்பூருக்கும் பரவி ஒரு வாரமாக நடந்த மோதல்களில் நால்வர் உயிரிழந்ததோடு 80 பேர் காயமடைந்தனர். இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து அமைதியை நிலைநாட்ட, அதிகாரியாகப் பயிற்சி பெற்றிருந்த முதல் 120 போர்க்காலப் படைவீரர்கள் துணை புரிந்தனர். சீனக் குடும்பங்களும் மலாய்க் குடும்பங்களும் வசித்து வந்த காத்தோங், கேலாங் கிராமங்களில் அவர்கள் வாரக்கணக்கில் சாலைத்தடுப்புகளை அமைத்து, சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதே ஆண்டு ஜூலை முதல் தேதி நடைபெற்ற முதல் சிங்கப்பூர் ஆயுதப்படை தினத்தன்று, ஜாலான் பெசார் விளையாட்டரங்கில் நடைபெற்ற அணிவகுப்பில் பங்குபெற இவர்கள் அழைக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் அப்போதைய தற்காப்பு அமைச்சர் லிம் கிம் சான் கலந்துகொண்டார். சிங்கப்பூர் ஆயுதப்படையின் முதல் போர்க்காலப் படை அதிகாரிகளுக்குக் கிடைத்த தனித்துவ அனுபவம் இது. அவர்கள் பாசிர் லாபா முகாமிலிருந்த சிங்கப்பூர் ஆயுதப்படை பயிற்சிக் கழகத்தில் 1969 ஜூலை 10ஆம் தேதி அதிகாரிகளாக ஆணைபெற்றனர்.
இவர்களுக்கு முன்பாகப் பயிற்சிக் கழகத்தில் ஆணைபெற்ற அதிகாரிகள் அனைவருமே முழுநேர அதிகாரிகள். முன்னோடி போர்க்காலப் படை அதிகாரிகளில் 40க்கும் மேலானோர் புதன்கிழமை (ஜூலை 10) ஈஸ்ட் கோஸ்ட் சாலையிலுள்ள உணவகத்தில் சந்தித்து, தாங்கள் அதிகாரிகளாக ஆணைபெற்று 50 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் “தெட் மாட்லி பன்ச்” என்ற புத்தகத்தை வெளியிட்டனர். ஆயுதங்கள் இல்லாத போர்ப் பயிற்சி, இயந்திரத் துப்பாக்கியைப் பயன்படுத்தும் பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்தப் புத்தகம் விற்பனைக்காக வெளியிடப்படவில்லை. த நியூ பேப்பரின் முன்னாள் விளையாட்டுச் செய்தியாளரான 69 வயது பிராயன் மில்லர் நூலை எழுதினார். இவரும் முன்னோடி அதிகாரிகளில் ஒருவராவார். இந்த முன்னோடி அதிகாரிகள் தற்போதைய ஈராண்டுகளுக்குப் பதிலாக அக்காலத்தில் மூன்றாண்டு முழுநேர தேசிய சேவையை முடித்தவர்கள். இந்த அதிகாரிகளில் ஆக மூத்தவர் 80 வயதாகும் திரு ஃபூ மிங் இயோவ். முன்னாள் மனிதவள இயக்குநரான இவர் 2006ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார்.