சிங்கப்பூரில் 8.8 டன் எடை கொண்ட யானைத் தந்தங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21ஆம் தேதி) இரவு பறிமுதல் செய்யப்பட்டன. சிங்கப்பூரின் ஆகப் பெரிய யானைத் தந்தப் பறிமுதல் இதுவே. கிட்டத்தட்ட 300 ஆப்பிரிக்க யானைகளிலிருந்து இந்தத் தந்தங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னதாக ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூர் 177 கிலோகிராம் யானைத்தந்தங்களைப் பறிமுதல் செய்தது. அத்துடன் 11.9 டன் பங்கோலின் செதில்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தேசிய பூங்கா கழகமும் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையமும் கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்தன. காங்கோ குடியரசிலிருந்து வியட்னாமை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்குக் கப்பல்களுக்குள் 17.6 மில்லியன் வெள்ளி மதிப்பிலான யானைத் தந்தங்களும் 48.6 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பங்கோலின் செதில்களும் இருந்ததைக் கப்பல்களைச் சோதனை செய்த அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
ஏப்ரலில் நைஜீரியாவிலிருந்து வியட்னாமுக்குச் சென்றுகொண்டிருந்த இரண்டு கப்பல்கள் இடைமறிக்கப்பட்டு, அவற்றுக்குள் பெருமளவில் காணப்பட்ட பங்கோலின் செதில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கப்பல்களில் ஒன்றில் 12.9 டன் செதில்களும் மற்றொரு கப்பலில் 12.7 டன் செதில்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தப் பறிமுதல் நடவடிக்கையும் சேர்த்து, சிங்கப்பூர் ஏப்ரல் மாதம் முதல் இதுவரை மொத்தம் 37.5 டன் பங்கோலின் செதில்கள் பறிமுதல் செய்துள்ளது.