சாலையை முறைதவறி கடந்து சென்ற ஒரு பெண்ணைக் கார் ஒன்று இடித்துள்ளது. பாலஸ்டியர் ரோட்டில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து மாலை 5.29 மணிக்கு போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.
சிறு காயங்களுடன் அந்தப் பெண் தப்பித்துக்கொண்டார். அந்தப் பெண் மருத்துவமனைக்குப் போக மறுத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர்.
ரோட்ஸ்.எஸ்ஜி, எஸ்ஜி ரோட் விஜிலாண்டே ஆகிய ஃபேஸ்புக் பக்கங்களில் இந்த விபத்தைக் காட்டும் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டது. சாலையைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது அந்தப் பாதசாரி கவனமாகச் செல்லவில்லை என்றும் அவர் கடந்து செல்வதை அப்போது கார் ஓட்டுநர் பார்த்திருக்க முடியாது (blind spot) என்றும் இணையவாசிகள் சிலர் கூறியிருந்தனர்.
பெண்ணை மோதிய காரின் வேகம் தக்க நேரத்தில் குறைந்ததாகவும், இல்லாவிடில் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருந்திருக்கக்கூடும் என்றும் ஃபேஸ்புக் பயனீட்டாளர் பலாபாய் இயூஜியானோ குறிப்பிட்டார்.
சம்பவத்தை போலிசார் விசாரித்து வருகின்றனர்.