ஃபேஸ்புக் காணொளி வலைத்தள பேராளர் ஒருவர், தன்னுடைய சிங்கப்பூர் நிறுவனத்தில் வேலையில் சேர மனு செய்யும்படி வியட்னாமியருக்கு அழைப்பு விடுத்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த விளம்பரத்தைத் தான் ஆராய்ந்து வருவதாக சிங்கப்பூரின் நியாயமான வேலை நடைமுறைகளுக்கான முத்தரப்பு பங்காளித்துவ கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன இஸ்ரேலியரான 27 வயது நஸிர் யாசின் என்பவர் கடந்த ஏப்ரலில் சிங்கப்பூருக்கு வந்து ‘நாஸ் டெய்லி மீடியா கம்பெனி’ என்ற நிறுவனத்தைத் தோற்றுவித்தார். அவருடைய ‘நாஸ் டெய்லி’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தை நாடுவோரின் எண்ணிக்கை சுமார் 13 மில்லியனாக இருக்கிறது.
நாஸ் என்று பிரபலமாகி இருக்கும் திரு யாசின், இம்மாதம் 12ஆம் தேதி ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய சிங்கப்பூர் நிறுவனத்தில் பணியாற்ற வியட்னாமியர் தேவை என்று தெரிவித்து இருந்தார். தனக்கு மின்னஞ்சலில் விண்ணப்பங்களை அனுப்பும்படி அவர் அழைப்பு விடுத்து இருந்தார். அந்த விளம்பரத்தைத் தான் ஆராய்ந்து வருவதாகநியாயமான வேலை நடைமுறைகளுக்கான முத்தரப்பு பங்காளித்துவ அமைப்பு தெரிவித்து இருக்கிறது.
நியாயமான வேலை நியமன நடைமுறைகள் பற்றிய முத்தரப்பு வழிகாட்டி நெறிமுறைகள் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட அனைத்து வேலைகளுக்கும் பொருந்தும். விளம்பரங்கள் எந்த வகை ஊடகத்தில் இடம்பெற்றாலும் எல்லா முதலாளிகளும் இந்த வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாக இந்த அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. அந்த வழிகாட்டி நெறிமுறைகளின் கீழ், சிங்கப்பூரர்கள் என்ற வார்த்தை இடம்பெறாத அல்லது சிங்கப்பூர் அல்லாத மற்றவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறும் விளம்பரங்கள் எதையும் வெளியிடக்கூடாது.
முதலில் வேலை சிங்கப்பூரர்களுக்கே என்று குறிப்பிட்டு குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு விளம்பரங்கள் செய்யப்பட வேண்டும். அதற்குப் பிறகுதான் நிறுவனங்கள் எம்பிளாய்மெண்ட் பாஸ் கேட்டு விண்ணப்பிக்கலாம். இருந்தாலும் 10க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்டுள்ள, மாதம் $15,000 அல்லது அதற்கும் அதிகமாக நிரந்தர மாத சம்பளம் வழங்குகின்ற நிறுவனங்களுக்கு அல்லது குறுகியகால அடிப்படையிலான வேலை என்றால் இந்த விதிகளில் இருந்து விலக்கு உண்டு என்று அந்தக் கூட்டணியின் பேச்சாளர் ஒருவர் விளக்கினார்.
பாரபட்சமான வேலை நியமன நடைமுறைகள் எந்த வடிவில் இடம்பெற்றாலும் அதை இந்தக் கூட்டணி கடுமையான ஒன்றாகக் கருதுகிறது என்றார் அவர்.