சிங்கப்பூரிலுள்ள 50 வயதுக்கு மேலான பெண்களில் அதிகமானோர் முதல்முறை மார்பகப் பரிசோதனைக்குச் செல்கின்றனர். ஆனால், இவர்களில் பெரும்பாலோர் ஈராண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது பரிசோதனை செய்துகொள்வதில்லை.
2014 முதல் 2016 வரை, முதல்முறையாக மெமோகிராம் பரிசோதனைக்குச் சென்ற பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் சுமார் ஆயிரம் அதிகரித்தது. 2014ல் 6,550 பெண்களும் 2016ல் 8,598 பெண்களும் மெமோகிராம் பரிசோதனைக்குச் சென்றதாக சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் அண்மைய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால், 2016 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில், ஐவரில் நான்கு பேர் இரண்டாவது மெமோகிராம் பரிசோதனைக்குச் செல்லவில்லை.
இந்த வயதுப் பிரிவிலுள்ள பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் அதிகமாக இருந்தபோதிலும், பலரும் இரண்டாவது பரிசோதனையைப் புறக்கணிக்கின்றனர்.
பெண்களிடையே பரவலாகக் காணப்படும் புற்றுநோய்
இரண்டாவது மெமோகிராம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் விகிதம் 2016ல் 13.6 விழுக்காடாகவும், 2017, 2018 ஆண்டுகளில் சுமார் 18 விழுக்காடாகவும் இருந்தது.
சிங்கப்பூர் பெண்களிடையே பரவலாகக் காணப்படும் புற்றுநோய் மார்பகப் புற்றுநோயாக இருப்பதால், இந்தப் புள்ளிவிவரங்கள் கவலையளிக்கின்றன. சிங்கப்பூர் பெண்களில் 14 பேரில் ஒருவருக்கு 75 வயதுக்கு முன்பாக மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது.
பெண்களின் மரணத்திற்குக் காரணமான ஆக ஆபத்தான புற்றுநோயும் மார்பகப் புற்றுநோய்தான். சென்ற 2011 முதல் 2015 வரை புற்றுநோயால் நேர்ந்த மரணங்களில் 17.3 விழுக்காட்டுக்கு அல்லது 2,105 மரணங்களுக்கு மார்பகப் புற்றுநோயே காரணம் என சிங்கப்பூர் புற்றுநோய் பதிவகத்தின் 2015ஆம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. சென்ற ஆண்டு, 991 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் உயிரிழந்தார்கள்.
பரிசோதனைக்குத் தொடர்ந்து செல்லவேண்டும்
முதல் மெமோகிராம் பரிசோதனையில் எந்தக் கோளாறும் தென் படாவிட்டால், அடுத்தடுத்த மெமோகிராம் பரிசோதனைகளிலும் எந்தக் கோளாறும் இருக்காது என்று அர்த்தமில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
“எந்தவொரு மருத்துவப் பரிசோதனையும் பயனளிப்பதற்கு, அதை ஒரு முறை மட்டுமே செய்யக்கூடாது,” என்கிறார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகப் புற்று
நோய் நிலையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சைப் பிரிவின் மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் சான் சிங் வான்.
“வழக்கமான கால இடைவெளியில் மார்பகப் பரிசோதனை செய்வது முக்கியம். ஏனெனில், பெரும்பாலான மார்பகப் புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிடமுடியும். அதோடு, ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சையளித்தால் நல்ல பலன்களும் கிடைக்கும் என்பதை நாம் அறிவோம்,” என்றார் அவர்.
மெமோகிராம், மார்பகப் புற்றுநோய் பற்றிய தவறான எண்ணங்களாலும் அச்சத்தாலும் நோயாளிகள் அடிக்கடி பரிசோதனைக்குச் செல்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.