சிக்ஸ்த் அவென்யூ எம்ஆர்டி நிலையத்தின் நகரும் படிக்கட்டுகளிலிருந்து ஐந்து மீட்டர் உயரத்திலிருந்து விழவிருந்த ஐந்து வயது சிறுவனை ஆறே வினாடிகளில் சென்றடைந்து காப்பாற்றியுள்ளார் மூத்த நிலைய மேலாளரான 39 வயது முகம்மது ஃபிர்தவுஸ் முகம்மது யூசோஃப்.
இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.40 மணிக்கு நடந்தது. அன்று நடந்தவற்றை நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் விளக்கினார் ஃபிர்தவுஸ். நிலையத்துக்குள் நுழைந்த தாயார் தனது மற்றொரு பிள்ளையை ஒரு தள்ளுவண்டி யில் தள்ளியவாறே நகரும் படிக்கட்டுகளில் சென்று கொண்டிருந்தார்.
பின்னால் வந்த அவரது ஐந்து வயது மகன் நகரும் படிக்கட்டுகளில் விளையாடியவாறு வந்தபோது, பிடிதவறி, ஒரு கையால் கைப்பிடியை பிடித்தபடி தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்த ஃபிர்தவுஸ், மிக விரைவாக படிக்கட்டுகளில் ஓடி பையனைப் பிடித்து தன் பக்கம் இழுத்தபோது, கால் இடறி கீழே விழுந்தார். இருப்பினும் பையன் காப்பாற்றப்பட்டதில் நிம்மதி என்றார் ஃபிர்தவுஸ்.