புக்கிட் கோம்பாக் பகுதியில் புதிய தேசிய சேவை மையம் 2023ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது திறக்கப்படும்போது அதன் வசதிகளைப் பயன்படுத்தி பலனடையக்கூடியவர்களில் தேசிய சேவையாளர்கள் மட்டுமல்ல. அவர்களது குடும்பத்தினரும் பொதுமக்களும்கூட அதன் வசதிகளைப் பயன்படுத்த முடியும்.
உணவு, பானக் கடைகள், குழந்தைப் பராமரிப்பு நிலையம், வெளிப்புற வசதிகள், ஓட்டப் பந்தய திடல், காற்பந்துத் திடல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் தேசிய சேவை மையத்தில் இடம்பெறும்.
மையத்தின் நில அகழ்வு நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு பேசிய தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், தேசிய சேவையாளர்கள் ஒன்றுகூடுதவதற்கான கட்டடம் மட்டுமல்ல.
தேசிய சேவைக்கு முன்பதிவு செய்வோர், அது தொடர்பான மருத்துவப் பரிசோதனைகளை இந்த மையத்தில் மேற்கொள்ள முடியும்.

அதோடு, மருத்துவ அல்லது பல் மருத்துவப் பராமரிப்புக்காக முழுநேர தேசிய சேவையாளர்கள் இங்கு அமையவுள்ள ராணுவ மருத்துவ நிலையத்திற்குச் செல்லலாம்.
டௌண்டவுன் ரயில் பாதையில் அமைந்துள்ள கேஷு எம்ஆர்டி நிலையத்திலிருந்து வெளியேறி மேம்பாலம் மூலம் தேசிய சேவை மையத்திற்குச் செல்ல முடியும்.
“சிங்கப்பூரின் தனித்தன்மைவாய்ந்த தேசிய சேவை கலாசாரத்தையும் தேசிய சேவையாளர் கொண்டுள்ள கடப்பாட்டையும் பிரதிபலிப்பதாக இந்த மையம் அமையும்,” என்று டாக்டர் இங் கூறினார்.
தேசிய சேவை மையத்தை ஒரு பொழுதுபோக்கு கூடமாக பொதுமக்கள் பயன்படுத்த முடியும் என்ற அவர், தேசிய சேவையைப் பற்றி அறிந்துகொள்வதோடு தற்காப்பு துறையில் வாழ்க்கைத் தொழிலைத் தொடங்குவது பற்றியும் அவர்கள் பரிசீலிக்கலாம் என்று கூறினார்.

சாஃப்ரா மன்றங்களைப் போலவே நண்பர்கள், குடும்பத்தினருடன் ஒன்றுகூடி நேரம் கழிப்பதற்கான ஒரு சிறந்த இடமாகவும் இந்த மையம் அமையும் என்றார் அவர்.
நாட்டிற்காக முன்னாள், இன்னாள் தேசிய சேவையாளர்களின் சேவைக்காகவும் அவர்களது குடும்பத்தாரின் ஆதரவுக்காகவும் இந்த மையம் அர்ப்பணிக்கப்படும் என்று டாக்டர் இங் கூறினார்.
“எதிர்கால தேசிய சேவையாளர்களுக்கான தேசிய சின்னமாக இந்த மையம் உருவெடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம்,” என்றார் அவர்.