சாலையில் மின்-ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற ஒருவரை நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரி ஒருவர் உதைப்பதையும் அதனைத் தொடர்ந்து அந்த மின்-ஸ்கூட்டர் ஓட்டுநர் பறந்துபோய் சாலையோரத்தில் விழுவதையும் காட்டும் காணொளி வெகுவாகப் பரவி வருகிறது.
‘எஸ்ஜி ரோடு விஜிலான்டெ’யின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட அந்தக் காணொளியில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களைத் தவறுதலாகப் பயன்படுத்துவதைக் கண்காணித்துப் பிடிப்பதற்காக நிலப் போக்குவரத்து ஆணையம் அமர்த்திய பல அமலாக்க அதிகாரிகள் பிடோக் ரெசர்வோர் ரோட்டில் ஒரு சாலைச் சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது.
மின்-ஸ்கூட்டர் ஒன்று குறிப்பிடத்தக்க வேகத்தில் சாலைச் சந்திப்பை நோக்கிப் பயணிப்பதைப் பார்த்த அதிகாரி ஒருவர் சாலையின் மறுபுறத்திலிருந்து வேகமாக ஓடினார். மின்-ஸ்கூட்டர் ஓட்டி, வாகனத்தின் வேகத்தைச் சற்றும் குறைக்காமல் ஓட்டி வந்ததையடுத்து, அந்த அதிகாரி மின்-ஸ்கூட்டரின் பக்கவாட்டில் காலால் உதைப்பதையும் காணொளியில் காண முடிந்தது.
அதனையடுத்து, கட்டுப்பாட்டை இழந்த மின்-ஸ்கூட்டர் சாலையோரத் தடுப்பை இடித்து விழுந்தது. அதன் ஓட்டுநர் பறந்து சென்று புதர்ச் செடிகளுக்குப் பின்னால் இருந்த நடைபாதையில் விழுவதையும் காணொளியில் பார்க்க முடிந்தது.
மீண்டும் கீழே விழுவதற்கு முன்பு அந்த ஓட்டுநர் எழுவதைப் பார்க்க முடிந்தது. அவரது நிலை பற்றிய தகவல் இல்லை.
பொது நடைபாதைகளிலும் சாலைகளிலும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களை ஓட்ட அனுமதி இல்லை.
வாகனம் ஒன்றில் இருந்த கேமராவில் பதிவான இந்தக் காணொளி இணையத்தில் பரவியதையடுத்து பலரது கவனத்தை ஈர்த்ததுடன், மாறுபட்ட கருத்துகளை ஊடகவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.
சிலர் அதிகாரியின் நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாக இருப்பதாகக் கூறினாலும், அந்த மின்-ஸ்கூட்டர் ஓட்டுநர் செய்தது தவறு என்றும் அவர் சிவப்பு விளக்கு சமிக்ஞையை மதிக்காமல் வேகமாகச் சென்றிருந்தால் ஏற்படக்கூடிய விளைவு மிகமிக மோசமானதாக இருந்திருக்கும் என்றும் கருத்துரைத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம், போலிஸ் ஆகியவற்றின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.