நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியின் முன்னாள் மாணவத் தலைவரான 18 வயது பிரண்டன் மெண்டொலாங் யோங் ஃபு என்பவருக்கு 15 மாத நன்னடத்தைக் கண்காணிப்பு விதிக்கப்பட்டுள்ளது.
அதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவர் கழிப்பறையைப் பயன்படுத்தும்போது அதனைக் காணொளியில் பதிவுசெய்ததற்காக இந்தத் தண்டனை இன்று (ஜனவரி 2) விதிக்கப்பட்டது.
பிரண்டன் 100 மணி நேர சமூக சேவை புரியவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், நன்னடத்தைக் கண்காணிப்பு காலத்தில் அவர் தினமும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்.
பிரண்டனின் நன்னடத்தையை உறுதி செய்யும் விதமாக அவரது தந்தை $5,000 மதிப்பிலான பிணை உத்தரவாதமும் வழங்கினார்.
கல்வி உபகாரச் சம்பளம் பெற்று கல்வி பயின்று வந்த பிரண்டனிடம் பேசிய நீதிபதி, “நீ கல்வியில் சிறந்து விளங்குவதுடன் குடும்பத்தாருடனும் நல்லுறவைக் கொண்டிருப்பதை அறிகிறேன். உன்னுடைய தவற்றை நீ உணர்ந்திருக்கிறாய்,” என்றார்.
கடந்த ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி காலை 11 மணியளவில் கழிவறைக்குச் சென்ற பிரண்டன் தனது கைபேசியில் பாலியல் தொடர்பான தகவல்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது, அருகில் இருந்த கழிவறைக்குள் பாதிக்கப்பட்ட மாணவர் சென்றார். அவரது நடவடிக்கையைக் காணொளியாகப் பதிவு செய்ய எண்ணி தனது கைபேசியை அருகில் இருந்த கழிவறைக்கு மேல் பிடித்தார். சுமார் 2 நிமிடங்களுக்கு அவர் காணொளியைப் பதிவு செய்தார்.
பாதிக்கப்பட்ட மாணவன் இந்தச் செயலைக் கண்டதும் கைபேசியை இழுத்துக்கொண்டார் பிரண்டன்.
பிரண்டனுடன் சண்டையிடுவதற்காக பாதிக்கப்பட்ட மாணவன் சுமார் 15 நிமிடங்களுக்கு கழிவறைக்கு வெளியில் காத்திருந்துவிட்டு வகுப்பறைக்குத் திரும்பிவிட்டார். ஆனால் அன்றைய தினம் இரவு 9.15 மணியளவில் அவர் போலிசில் புகார் செய்தார்.
கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் இந்தச் செயலைச் செய்தது பிரண்டன்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. தனது குற்றச் செயலை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரண்டன் ஒப்புக்கொண்டார்.
பள்ளியிலிருந்து மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவரது உபகாரச் சம்பளம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பேச்சாளர் தெரிவித்தார்.
காணொளியைப் பதிவு செய்ததற்கு பிரண்டனுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை, $5,000 வரை அபராதம் ஆகியன விதிக்கப்பட்டிருக்கலாம்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity