சிங்கப்பூரில் பொங்கல் பண்டிகையின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் விதமாக ‘கம்பத்து பொங்கல்’ என்ற கருப்பொருளுடன் லிட்டில் இந்தியாவில் பொங்கல் கொண்டாட்டங்கள் களை கட்டவுள்ளன. இவ்வாண்டு கொண்டாட்டங்களில் சுமார் ஒரு மில்லியன் பேர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கொண்டாட்டங்கள் அடுத்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 10ஆம் தேதி) பொங்கல் ஒளியூட்டு விழாவுடன் தொடங்கி நான்கு வாரங்களுக்கு நீடிக்கவுள்ளன.
கேம்பல் லேனில் இந்திய மரபுடைமை நிலையத்திற்கு வெளியே நடைபெறவிருக்கும் இவ்விழாவில் பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, கல்வி ஆகியவற்றுக்கு இரண்டாவது அமைச்சருமான இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவுள்ளதாக லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் சங்கம் நேற்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தது. பொங்கல் பானை, கரும்பு ஆகியவற்றைத் தவிர, கம்பத்து குடிசைகளும் இவ்வாண்டின் அலங்காரங்களில் சிறப்பாக இடம்பெறும். அத்துடன், கிளைவ் ஸ்திரீட்டில் குடிசை ஒன்றும் அமைக்கப்படலாம் எனக் கூறப்பட்டது.
தமிழர் திருவிழாவாக மட்டும் சித்திரிக்கப்படாமல் சிங்கப்பூரின் கடந்த காலத்திலிருந்து தமிழர்கள் பொங்கலைக் கொண்டாடினர் என்பதை நினைவுகூரும் விதமாக இவ்வாண்டின் கருப்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
“கம்பத்து பொங்கல் என்ற கருப்பொருள் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் சிறப்பைக் கொண்டுள்ளது,” என்று லிஷாவின் தலைவர் திரு ராஜ்குமார் சந்திரா தெரிவித்தார்.
“குடும்பத்தினருக்கு இடையிலும் சிங்கப்பூர் மக்களுக்கு இடையிலும் உள்ள ஒற்றுமையை ஊக்கு விக்க இவ்வாண்டின் கருப்பொருள் முற்படுகிறது. இக்காலத்தில் அக்கம்பக்கத்தாருக்கு இடையிலான தொடர்புகள் வெகுவாகக் குறைந்துள்ளன. ஆனால் அந்தக் காலத்திலோ, பல இன மக்கள் அணுக்கமாக இருந்து பல்வேறு இனச் சடங்குகளிலும் கேளிக்கை நடவடிக்கையிலும் ஒன்றாகப் பங்கேற்றனர். சிங்கப்பூருக்குரிய இந்தச் சிறந்த பண்பை ஊக்குவிப்பதே இக்கருப்பொருளின் நோக்கம்,” என அவர் தமிழ் முரசிடம் கூறினார்.
ஏழாவது முறையாக நடக்கும் இந்த ஒளியூட்டு நிகழ்ச்சியில் ஒலி 96.8ன் வானொலி தொகுப்பாளர்கள், வசந்தம் ஒளிவழியின் ‘யார் அந்த ஸ்டார்’ பாட்டுத்திறன் போட்டியைச் சேர்ந்த கலைஞர்கள், தென்னிந்திய பின்னணிப் பாடகர்களான ஹரி ஹரசுதன், பிரியா ஜெர்சி ஆகியோர் பங்குபெறுகின்றனர். அத்துடன், தஞ்சாவூரைச் சேர்ந்த எட்டு கிரா மியக் கலைஞர்களின் பொய்க்கால் குதிரை, கரகாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட நடனங்கள் இடம்பெறும்.
இந்திய மரபுடைமை நிலை யத்திற்கு வெளியே உள்ள கூடா ரத்தில் இம்மாதம் 15ஆம் தேதி வரை மாலை நேரங்களில் இத்த கைய கலைநிகழ்ச்சிகள் நடந்தேறும். ஜனவரி 14ஆம் தேதி திரைப்படப் பாடகர்கள் முகேஷும் சுமுகியும் கலைநிகழ்ச்சிகளைப் படைப்பர். பிற இனத்தவரையும் உள்ளடக்கும் கோலம் போடுதல், நடனம் ஆகிய வற்றுக்கு மரபுடைமை நிலையம் ஏற்பாடு செய்திருப்பதாக அதன் பொது நிர்வாகி பவானி தாஸ் தெரிவித்தார்.