கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படும் லிட்டில் இந்தியா பொங்கல் திருவிழாவின் அங்கமாக, கிளைவ் ஸ்திரீட்லும் கேம்பல் லேனிலும் பொங்கல் மரபுடைமை விழா இம்மாதம் 13ஆம் தேதி முதல் 17 ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
ஆண்டுதோறும் பொங்கல் கொண்டாட்டங்களின் கவர்ச்சி அம்சமாகத் திகழும் மாட்டுத் தொழுவம், இம்முறை கிளைவ் ஸ்திரீட்டில் அமைக்கப்படவுள்ளது.
இதனால், ஹேஸ்டிங்ஸ் ரோடு இம்முறை மூடப்படாது என்று நேற்று (ஜனவரி 3) இந்திய மரபுடைமை நிலையத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
விக்னேஷ் பால் பண்ணையிலிருந்து மூன்று பசுக்கள், இரண்டு கன்றுகள், இரண்டு ஆடுகள், ஒரு காளை ஆகியவை ஜனவரி 9ஆம் தேதியன்று ‘போலி எட் கிளைவ்’ என்ற இடத்திற்குக் கொண்டு செல்லப்படும்.
‘கம்பத்து பொங்கல்’ என்ற கருப்பொருளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லிட்டில் இந்தியாவில் பொங்கல் கொண்டாட்டங்களில் இது சிறப்பு அங்கம் வகிக்கிறது.
மாட்டுப்பொங்கல் அன்று, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்தக் கால்நடைகள் குளிப்பாட்டப்பட்டு அலங்காரம் செய்யப்படும்.
பொங்கல் தினத்தன்றும் அதற்கு மறுநாளும் சுமார் 5,000 பேருக்கு பொங்கல் பரிமாறப்படும்.
ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயம், ஸ்ரீ சிவதுர்கா ஆலயம் ஆகியவை இதற்கு நிதியாதரவு அளிப்பதாகக் கூறப்பட்டது.
ஜாமியா இல்லம் உள்ளிட்ட சில முதியோர் இல்லங்களிலிருந்து வரும் முதியோர்கள் இந்தப் பொங்கலைச் சுவைப்பர் என்று கூறப்பட்டது.
இந்தக் கொண்டாட்டத்தில் இந்திய மரபுடைமை நிலையம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளும் அங்கம் வகிக்கவுள்ளன.
‘கம்பத்து பொங்கல்’ கருப்பொருளுடன் ஒத்துப்போகும் விதமாக பிற இனத்தவரையும் உள்ளடக்கும் கோலம்போடுதல், நடன நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு மரபுடைமை நிலையம் ஏற்பாடு செய்திருப்பதாக அதன் பொது நிர்வாகி பவானி தாஸ் தெரிவித்தார்.
நிலையத்தில் நடத்தப்படவுள்ள ஓவிய, சமையல் வகுப்புகளுடன் கிராஞ்சி பண்ணை சுற்றுலா, லிட்டில் இந்திய மரபுடைமை சுற்றுலா ஆகியவையும் கொண்டாட்டங்களின் அங்கமாகத் திகழும்.
‘ஆரோக்கியம் மற்றும் பசுமைப் பொங்கல்’ என்ற துணைக் கருப்பொருளையும் இந்திய மரபுடைமை நிலையம் அறிமுகம் செய்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து ஆரோக்கியமான முறையில் பொங்கலைச் சமைக்கும் வகுப்புகளும் நடத்தப்படும்.
இந்த நடவடிக்கைகள் இளையர்களை அதிக அளவில் சென்று சேரவேண்டும் என்பதற்காக கடந்தாண்டு தீபாவளி முதற்கொண்டே சமூக ஊடகங்களின் மூலம் இவ்வாண்டு பொங்கல் நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடுத்த முயல்வதாக திருவாட்டி பவானி தாஸ் கூறினார்.
இவ்வாண்டின் பொங்கல் கொண்டாட்டங்கள் அடுத்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 10ஆம் தேதி) பொங்கல் ஒளியூட்டு விழாவுடன் தொடங்கி நான்கு வாரங்களுக்கு நீடிக்கவுள்ளன.
கேம்பல் லேனில் இந்திய மரபுடைமை நிலையத்திற்கு வெளியே நடைபெறவிருக்கும் ஒளியூட்டு நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, கல்வி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவுள்ளதாக லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் சங்கம் தெரிவித்தது.
பொங்கல் பானை, கரும்பு ஆகியவற்றைத் தவிர, கம்பத்து குடிசைகளும் இவ்வாண்டின் அலங்காரங்களில் சிறப்பாக இடம்பெறும். அத்துடன், கிளைவ் ஸ்திரீட்டில் குடிசை ஒன்றும் அமைக்கப்படலாம் எனக் கூறப்பட்டது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity