சிங்கப்பூர் கடந்த ஆண்டில் முதலீடுகளுக்கான எதிர்பார்ப்புகளையும் மீறி $15.2 பில்லியன் மதிப்புள்ள முதலீடுகளை ஈர்த்துள்ளது.
இது, 2018ல் சிங்கப்பூர் ஈர்த்துள்ள முதலீடுகளுடன் ஒப்பிடுகையில் 39 விழுக்காடு அதிகமாகும்.
உலக முழுவதும் நிலவும் நிச்சயமற்ற பொருளியல் சூழலால் பெரும் சவால்களை எதிர்நோக்கிய சிங்கப்பூர் முன்னைய கணிப்புகளையெல்லாம் உடைத்து முதலீடுகளை ஈர்த்துள்ளது.
இவற்றில் பெரும்பாலான முதலீடுகள், எரிசக்தி முதல் ரசாயன நிறுவனங்கள் வரையிலான தயாரிப்புத் துறையைச் சேர்ந்தவை என்று பொருளியல் வளர்ச்சிக் கழகம் நேற்று தெரிவித்தது.
2019ல் சிங்கப்பூர் ஈர்த்துள்ள முதலீடுகளுக்கான கடப்பாடுகள், ஆசியாவின் வளர்ச்சி வாய்ப்புகளில் பங்கேற்க விரும்பும் நாடுகள் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்பட விரும்புவதைக் காட்டுவதாக பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் பே சுவான் ஜின் தெரிவித்தார்.
“2019ல் எட்டு முதல் பத்து பில்லியன் முதலீடுகளை ஈர்க்க முடியும் என்று கழகம் கணித்திருந்தது. ஆனால் சிங்கப்பூர் ஈர்த்துள்ள 15.2 பில்லியன் டாலர் முதலீடுகள் எதிர்பார்ப்புகளை மிஞ்சியுள்ளது,” என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் கழகம் குறிப்பிட்டது.
இந்த முதலீடுகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் வரும் ஆண்டுகளில் முழுமையாக அமல்படுத்தப்பட்டால் 32, 814 புதிய வேலைகள் உருவாகும். இது, 16,000 முதல் 18,000 வரை புதிய வேலைகளை உருவாக்கும் என்று முன்னு ரைக்கப்பட்டதைவிட இரண்டு மடங்காகும்.
2019ல் முதலீடுகளுக்கான முக்கிய கடப்பாடுகளில் கணினி சில்லுத் தயாரிப்பு நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜிசின் பல பில்லியன் டாலர் முதலீடுகளும் அடங்கும். உட்லண்ட்சில் புதிய தொழிற்சாலையை அமைக்கவும் விரிவுபடுத்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
எரிவாயு நிறுவனமான லிண்டே, ஜூரோங் தீவில் அமையவிருக்கும் புதிய வளாகத்திற்கு 1.4 பில்லியன் அமெரிக்க டாலரை செலவிடவிருக்கிறது.
மேலும் பேசிய டாக்டர் பே, “2019ஆம் ஆண்டின் முதலீடுகளுக்கான புள்ளி விவரங்கள் சிங்கப்பூர் மீது நிறுவனங்கள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன,” என்றார்.
“நீண்டகால நோக்கத்தில் நிறுவனங்கள் முதலீடுகளை செய்துவரு கின்றன. இதனால் சவாலான பொருளியல் சூழ்நிலையிலும் தேவைகளை சமாளிக்க நிறுவனங்கள் தயாராகி வருகிறது,” என்று டாக்டர் பே குறிப்பிட்டார்.