தீவு முழுவதும் தொடர்ச்சியாகப் பொங்கல் விழா களைகட்ட, ஸ்ரீ நாராயண மிஷனும் அதன் பங்காளிகளுடன் பொங்கலைக் கொண்டாடியது. நேற்று முன்தினம் நடைபெற்ற சமூகப் பொங்கல் கொண்டாட்டத்தில் ஸ்ரீ நாராயண மிஷனில் தங்கும் முதியோர்், அடித்தள அமைப்புகள் மற்றும் சமய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அதில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.
‘ஏவா’ (AWWA) ஞாபக மறதிநோய் பராமரிப்பு நிலையம் (ஈசூன்), மெராண்தீ இல்லம்@பிளாங்கி வில்லேஜ் ஆகியவற்றை சேர்ந்த முதியோர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இக்கொண்டாட்டத்தை ஸ்ரீ நாராயண மிஷன் இந்து அறக்கட்டளை வாரியத்தின்கீழ் இயங்கும் ஆஷ்ரம் போதையர் மறுவாழ்வு இல்லத்துடன் சேர்ந்து நடத்தியது.
இவ்விழாவை இரண்டாவது ஆண்டாக நடத்துவதாகக் கூறிய ஸ்ரீ நாராயண மிஷன் தலைவர் திரு ஜெயதேவ் உன்னிதன், சமூகத்தினருடன் தொடர்புகளை வளர்த்துக்கொள்ளவும் இந்திய கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நிகழ்ச்சி வகைசெய்கிறது என்றார்.
பொங்கல் பானையில் பாலை ஊற்றுவது, தோரணம் கட்டுதல், வண்ணம் தீட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் முதியோர் ஈடுபட்டனர். வசந்தம் தொலைக்காட்சிக் கலைஞர்களின் பாடல் அங்கமும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை உற்சாகப்படுத்தியது.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர், பொங்கல் தயாரித்தல், ரங்கோலி இடுதல், தோரணம் கட்டுதல் போன்ற இதர நடவடிக்கைகளில் பங்கெடுத்தவர்களுடன் இணைந்து செயல்பட்டார்.
‘‘மற்ற இனத்தவர்களும் பொங்கல் பண்டிகையைப் பற்றி அறிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. வெவ்வெறு பின்னணிகளிலிருந்து வரும் பங்காளிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒட்டுமொத்த சமுதாயத்தில் அனைவருக்கும் பங்கு உண்டு என்பதையும் இது உணர்த்துகிறது,’’ என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் திரு விக்ரம் நாயர்.
பொங்கல் பண்டிகையை முறையாக எப்படி கொண்டாடுவது என்பதை ஆஷ்ரம் போதையர் மறுவாழ்வு இல்லத்தில் தங்கியிருப்போர் கற்றுக்கொள்வதோடு சமூகத்துடன் ஒன்றிணைந்து செயல்படவும் இத்தகைய நிகழ்ச்சி வழிவகுக்கின்றது என்றார் அதன் செயல்பாட்டுத் தலைவர் திரு கே.எஸ்.மணியம்.
பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளை ஆஷ்ரமத்தில் தங்கியிருப்போர் செய்தனர்.
அடுத்தமுறை தங்களது குடும்பத்தினருடன் இணைந்து வீட்டில் பொங்கல் கொண்டாடும்போது இந்தக் கொண்டாட்ட முறைகளை அவர்கள் நினைவில் வைத்திருப்பர் என்று திரு கே.எஸ்.மணியம் குறிப்பிட்டார். முதல்முறையாக இதுபோன்ற கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதாகக் கூறிய ஸ்ரீ நாராயண மிஷன் அமைப்பின் சீனத் தொண்டூழியர் 79 வயது திருமதி பொங் ஜின் ஜி, இந்த அனுபவத்திலிருந்து தமிழ் கலாசாரத்தைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.