தொழில்நுட்பக் கல்விக்கழகம், தன்னுடைய மாணவர்கள் அந்த கல்விக் கழக சான்றிதழைப் பெற்ற பிறகும் தொடர்ந்து படித்து பட்டயப் படிப்பை முடிக்க அதிக வாய்ப்களை வழங்குவது பற்றி ஆராய்ந்து வருகிறது.
பலதுறைத் தொழிற்கல்லூரியில் படிப்பைத் தொடர்வது, வேலை பார்த்துக்கொண்டே பட்டயப் படிப்பை முடித்து பட்டயம் பெறுவது ஆகியவை அந்தப் புதிய வாய்ப்புகளில் உள்ளடங்கும்.
வேலை பார்த்துக்கொண்டே பட்டயப் படிப்பை படித்து முடிக்கும் ஓர் ஏற்பாடு தொழில்நுட்ப கல்விக்கழக பட்டதாரி மாணவர்களுக்கான ஒரு மாற்று வழியாக 2018ல் தொடங்கப்பட்டது. இந்த பட்டயப் படிப்புச் செயல்திட்டம் பொதுவாக இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும். பாடத்திட்ட நேரத்தில் சுமார் 70 விழுக்காடு வேலையிடங்களில் இடம்பெறும்.
எஞ்சிய காலத்தை இந்தக் கல்விக் கழகத்தில் மாணவர்கள் செலவிடுவர்.
இதனிடையே, வரும் 2025ஆம் ஆண்டு வாக்கில் இந்தச் செயல்திட்டத்தின் கீழ் சுமார் 40 பட்டயப்படிப்புகள் போதிக்கப்படும் என்றும் அவற்றில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 1,000 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படும் வாய்ப்பு உள்ளது என்றும் தொழில்நுட்பக் கல்விக்கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான திருவாட்டி லோ கா ஜெக் நேற்று தெரிவித்தார்.
இப்போது போதிக்கப்படும் இத்தகைய 24 பட்டயப் படிப்புகளில் சுமார் 500 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.
திருவாட்டி லோ, அங் மோ கியோவில் இருக்கும் இந்தக் கல்விக்கழகத்தின் தலைமையகத்தில் நேற்று ஊடகத்திடம் பேசினார். கழகத்தின் ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தை அவர் வெளியிட்டார்.
ஏற்கெனவே 2015ல் வெளியிடப்பட்ட திட்டத்தின் விரிவாக்கமாக புதிய திட்டம் இருக்கும். இருந்தாலும் அந்தப் புதிய திட்டத்தில் தொழில்துறை மாற்றங்களைக் கைகொள்ளும் நடைமுறையும் சேர்க்கப்பட்டு இருக்கிறது என்று அவர் விளக்கினார்.
புதிய வேலைகளைப் பார்க்கையில், இப்போது பல மாற்றங்கள் இடம்பெற்று இருக்கின்றன. ஊழியர்கள் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று பணிகளை மேற்கொள்வதற்கான தேர்ச்சிகளுடன் திகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
வேலைகளும் மின்னிலக்கமயமாகி வருகின்றன என்பதை சுட்டிக்காட்டிய திருவாட்டி லோ, ஏற்புடைய நிலையில் தேவைக்கு ஏற்ப மாணவர்களை உருவாக்குவதற்காக கணினித் தகவல் பொறியியல் போன்ற துறைகளில் புதிய பயிற்சிகளை இந்தக் கழகம் அறிமுகம் செய்யும் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, தொழில்நுட்பக் கல்வி கழகம் 10 ஆண்டு பட்டதாரிகள் வேலை நியமன ஆய்வு முடிவுகளை நேற்று வெளியிட்டது.
பட்டதாரிகளில் 59 விழுக்காட்டினர் கழகத்தின் சான்றிதழுக்கு மேலும் உயர்கல்வித் தகுதியைப் பெற்று இருக்கிறார்கள் என்பதை அந்த ஆய்வு முடிவுகள் காட்டின.