ஒரே நேரத்தில் பொங்கல், சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தது ‘சன்லவ்’ இல்லம்.
“பல்லின நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் புத்தாக்க முயற்சியாக பொங்கலையும் சீனப் புத்தாண்டையும் ஒருசேரக் கொண்டாட எனக்குத் தோன்றியது. சீனர்களும் இந்தியர்களும் சேர்ந்து இரண்டு கலாசார கொண்டாட்டங்களிலும் பங்கேற்றனர். மற்றொரு கலாசாரத்தைப் பற்றி கற்றுக்கொள்ளும் ஒரு தளமாகவும் இந்நிகழ்ச்சி இருந்தது,” என்றார் ‘சன்லவ்’ அமைப்பின் தலைமைத் திட்ட அதிகாரி திரு ஸ்ரீராஜமோகன், 59.
ஹவ்காங் இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் ஆதரவில் இம்மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 100 பேர் கலந்துகொண்டனர்.
ஒருபுறம் தமிழர்கள் பொங்கலிட, அதனருகிலேயே சீனர்களின் ‘லோஹே’ கொண்டாட்டம் இடம்பெற்றது. ஹவ்காங் அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் திரு லீ ஹொங் சுவாங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
செல்வக் கடவுளாக அறியப்படும் ‘கை ஷென் யி’ (Cai Shen Ye) எனும் சீனக் கடவுளைப் பிரதிபலிக்கும் ஆடையை அணிந்து கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார் வட்டார குடியிருப்பாளர் திரு சான் காய் சோ, 59.
அதோடு, பொங்கல் திருநாளுக்கான தோரணங்களும் கொண்டாட்ட இடத்தை அலங்கரித்தன.
ஹவ்காங்வாசியான திருமதி கவிதா சரவணன், 36, தம்முடைய 7 வயது மகனுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிரந்தரவாசியான அவர், கடந்த 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.
“பிள்ளைகளாக சேர்ந்து பொங்கல் வைத்ததை நான் பார்த்தது இதுவே முதல்முறை. இந்நிகழ்ச்சியின் மூலம் என் மகன் பொங்கல் திருநாளைப் பற்றி மேலும் அறிந்துகொண்டான்,” என்றார் இல்லத் தரசியான திருமதி கவிதா.