கொரோனா கிருமித்தொற்றைத் தடுப்பதில் முதல்நிலை மருத்துவ ஊழியர்களின் சேவையைப் பாராட்டி, அவர்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் முயற்சியில் பல்வேறு சமயக் குழுக்களும் கைகோத்துள்ளன. அவ்வகையில், நேற்று ஜூரோங் பலதுறை மருந்தகத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இருநூறு மதிய உணவுப் பொட்டலங்களையும் பாராட்டுக் குறிப்புகளையும் அவை வழங்கின.
ஜூரோங் வெஸ்ட்டில் அமைந்துள்ள ஆய்ஸா உணவகமும் தாமான் ஜூரோங் இன, சமய நல்லிணக்கக் குழுக்களும் அந்த மதிய உணவுப் பொட்டலங்களுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ள, அஸியாகிரின் பள்ளிவாசல், போ டியன் ஆலயம், பாஹாய் சமயம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அந்த உணவுப் பொட்டலங்களை விநியோகித்தனர்.
அஸியாகிரின் பள்ளிவாசல் பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் கைவண்ணத்தில் உருவான ஊக்குவிப்புக் குறிப்புகள் போன்ற கலைப்படைப்புகளையும் அவர்கள் அந்தப் பலதுறை மருந்தகத்தின் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களிடம் வழங்கினர்.
கிருமித்தொற்று காரணமாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டபோதும் அந்த மருந்தக ஊழியர்களுக்கான தமது ஆதரவைத் தெரிவிக்க விரும்பியதாகக் கூறினார் ஆய்ஸா உணவகத்தின் உரிமையாளர் திரு அப்துல் மாலிக், 44.
தங்களது இந்த முயற்சி, கிருமித்தொற்றைத் தடுக்கப் போராடி வரும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் பணியைச் சமூகம் மெச்சுகிறது என்பதை எடுத்துக்காட்டும் என நம்புவதாக அஸியாகிரின் பள்ளிவாசலின் நிர்வாகத் தலைவர் திரு முகம்மது ஹஃபீஸ் அப்துல் ரஷீத் குறிப்பிட்டார்.
பொது இடங்களில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களைக் காண நேர்ந்தால் சிங்கப்பூரர்கள் அவர்களைப் புறக்கணிக்கக்கூடாது என்று தாமான் ஜூரோங் இன, சமய நல்லிணக்கக் குழுக்களின் தலைவர் திரு முகம்மது ஃபைசல் ஒத்மான் வலியுறுத்தினார்.