கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குக் குறுகிய காலக் கடன் வழங்கும் விதமாக சிங்கப்பூரின் ஆறு வர்த்தகக் குழுமங்கள் சேர்ந்து $5 மில்லியன் ‘நம்பிக்கை’ நிதியை ஏற்படுத்தியுள்ளன.
கிருமித்தொற்றுப் பிரச்சினையால் தொழிலில் சரிவைச் சந்தித்துள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்கள், 12 மாதங்கள் வரையிலான நடைமுறை மூலதனத்திற்கு இந்த ‘நம்பிக்கை’ நிதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சிங்கப்பூர் வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
‘எமது வளரும் நிறுவனங்களுக்குக் கைகொடுத்தல் (ஹோப்)’ என்ற இந்த நிதிக்காக கோல்டுபெல், ஏப்ரிகாட் கேப்பிட்டல், ஹோ லீ, பேரடைஸ், சிங் லின், சாயில்பில்டு ஆகிய ஆறு குழுமங்கள் கைகோத்துள்ளன.
இந்த நிதித் திட்டத்தின் மூலம் நடைமுறை மூலதனக் கடன் பெறுவதற்கான விண்ணப்பக் காலம் நேற்று முன்தினமே தொடங்கிவிட்டது. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் 24 மணி நேரத்திற்குள் கடன்தொகை வழங்கப்பட்டுவிடும். இந்த நிதியைக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு உதவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு நிறுவனத்திற்கு $50,000 கடன் வழங்கப்படும். இதற்கான வட்டி விகிதம் 0.5% முதல் 0.75% வரை இருக்கும். கடன்பெற்றபின் மூன்றாம் மாதத்தில் இருந்து அசலையும் வட்டியையும் செலுத்துவதற்கான சலுகையும் அளிக்கப்படுகிறது.
கடன் வழங்குவதற்கான செயலாக்கக் கட்டணம் $80 மட்டும்தான் என்றும் சந்தையில் இதுவே ஆகக் குறைவானது என்றும் ‘பிஸ்னஸ் டைம்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.
‘நம்பிக்கை’ நிதியில் கடன் பெறுவதற்குத் தகுதிபெற ஒரு நிறுவனம் குறைந்தது 12 மாதங்களுக்கு உள்ளூரில் செயல்பட்டு இருக்க வேண்டும். அந்நிறுவனத்தின் பங்குகளில் குறைந்தது 30% சிங்கப்பூரர் வசம் இருக்கவேண்டும். அந்நிறுவனத்தின் செலுத்தப்பட்ட மூலதனம் குறைந்தது $25,000ஆக இருக்கவேண்டும்.