கொரோனா கிருமித்தொற்றினால் வர்த்தகங்களில் ஏற்பட்ட பின்னடைவைச் சரிக்கட்ட, வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று சில நிறுவனங்கள் குறிப்பிடுவதைச் சுட்டிக்காட்டிய இரண்டாம் நிதி அமைச்சர் இந்திராணி ராஜா, சில மாதங்களுக்குப் பிறகு நிலைமையை அரசாங்கம் ஆராயும் என்று நேற்று குறிப்பிட்டார்.
வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிலைத்தன்மை மற்றும் ஆதரவுத் தொகுப்பில் ஒதுக்கியுள்ள $4 பில்லியன் தொகையைச் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் நிறுவனங்களை ஊக்குவித்தார்.
யுஓபி பொருளியலாளர் பர்னபாஸ் கான், கேபிஎம்ஜி சிங்கப்பூர் நிறுவனத்தின் வரிகள் பிரிவின் துணைத் தலைவர் அஜய் குமார் சங்கனேரியா, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சங்கத் தலைவர் கர்ட் வீ, சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் யூஜின் டான் ஆகியோருடனான உரையாடலின்போது பிரதமர் அலுவலக அமைச்சருமான குமாரி இந்திராணி இவ்வாறு குறிப்பிட்டார்.
தொழில்துறைகளின் உடனடித் தேவைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இடைக்கால கடன் திட்டம், நிறுவன வரிக் கழிவுகள் போன்றவை உதவும் என்றார்.