இன்று (மார்ச் 3) உலக வனவிலங்கு தினம்.
2018ஆம் ஆண்டில் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பட்ட 51 இந்திய ஆமைகளின் தற்போதைய நிலை என்ன? அறிந்துவரும் முனைப்பில் இறங்கியது தமிழ் முரசு!
‘ஏக்கர்ஸ் (ACRES)’ எனும் விலங்குநல ஆய்வு, கல்வி சமுதாய அமைப்பு கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக அந்த ஆமைகளைப் பராமரித்து வந்தது.
அந்த ஆமைகளைக் குறித்தும் அவை இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது குறித்தும் சிறப்பு கட்டுரையையும் இதர செய்திகளையும் அப்போது தமிழ் முரசு பிரசுரித்திருந்தது.
கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு வனவிலங்கு காப்பகத்தில் வசிக்கும் இந்த ஆமைகளை அண்மையில் 'ஏக்கர்ஸ்' விலங்கு நல அமைப்பின் துணை தலைமை நிர்வாகி அன்பரசி பூபால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காணச் சென்றிருந்தார். அந்த ஆமைகள் சிறந்த உடல் நலத்துடன், சீராக இருக்கின்றன என்று அவர் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
‘ஏக்கரஸ்’ ஃபேஸ்புக் பக்கத்தில் தமது பயணத்தைப் பற்றி பதிவு செய்த குமாரி அன்பரசி, ஆமைகளைப் பராமரித்து வரும் ‘வைல்ட்லைஃப் எஸ்ஓஎஸ் இந்தியா’வின் முயற்சிகளைப் பாராட்டினார்.
கிட்டத்தட்ட 10 மாதகங்களாக கூர்ந்த கண்காணிப்பில் இருந்த அனைத்து ஆமைகளும் கடந்த டிசம்பர் மாதம் காட்டுக்குள் விடப்பட்டன என்றும் மேலும் ஒர் ஆண்டுக்கு சில ஆமைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் நம்பிக்கையளித்தார் குமாரி அன்பரசி.
“இந்த முயற்சியை நிர்வகிக்கும் ஆர்வமிக்க குழுவைச் சந்தித்தது என் மனதிற்கு நிம்மதி தந்தது. விடப்பட்ட இடத்தில் நலத்துடன் இருப்பது உட்பட அந்த ஆமைகள் நிபுணத்துவத்துடன் கண்காணிக்கப்படுகின்றன,” என்றார் குமாரி அன்பரசி.
2018ஆம் ஆண்டில் அந்த ஆமைகளை அனுப்பிய பின்பும் இதுவரை கூடுதலாக 20 இந்திய நட்சத்திர ஆமைகளை 'ஏக்கர்ஸ்' அமைப்பு சிங்கப்பூரில் மீட்டுள்ளது.
இந்த ஆமைகள் சிங்கப்பூருக்கு சொந்தமானவை அல்ல. இந்தியாவையும் இலங்கையும் சேர்ந்த இந்த ஆமைகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்வது அனைத்துலக அளவில் சட்டவிரோதம்.
'ஏக்கர்ஸ்' அமைப்பின் நடவடிக்கைகளைப் பற்றி அறியவும் அவர்களின் முயற்சிகளுக்குக் கைகொடுக்கவும் வரும் மே 15ஆம் தேதி பொதுமக்கள் கலந்துகொள்ளக்கூடிய ஒரு நன்கொடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேல் விவரங்கள்: https://give.asia/campaign/acres-charity-gala-2020#/