கொவிட்-19 கிருமித் தொற்று மலேசியாவில் வேகமாக பரவிவருவதால் அந்நாட்டு அரசாங்கம் நேற்று முன்தினம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அறிவித்தது.
அதனை அடுத்து தினமும் பல்லாயிரக்கணக்கில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வந்து வேலை செய்யும் ஊழியர்களும் அவர்களது முதலாளிகளும் மாற்று ஏற்பாடுகளுக்கு விரைந்து செயல்படுகின்றனர்.
தமது ஐந்து மலேசிய ஊழியர்களும் தினமும் அவர்கள் வசிக்கும் மலேசியாவின் ஜோகூர் பாருவிற்குச் சென்றுவருவதாகக் கூறினார் லிட்டில் இந்தியாவில் உணவகம் நடத்தும் திரு ஜெயகுமார்.
“அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவர்களால் செல்ல முடியாது. அவர்கள் கடையின் மேற்பகுதியிலேயே தங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்கிறேன்,” என்றார் அவர்.
“இருப்பினும் அவர்கள் தங்களின் குடும்பத்தினரை இரு வாரங்களுக்குப் பார்க்க இயலாது என்ற மனக்குறையை வெளிப்படுத்தியுள்ளனர்,” என்பதை அவர் தெரிவித்தார்.
வயது முதிர்ந்த பெற்றோர்கள் தம்முடன் வசிப்பதால்தான் தாம் தினமும் ஜோகூர் சென்று வருவதாகக் கூறினார் கடந்த 20 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் பணிபுரியும் திரு வேல்முருகன்.
“என் இரண்டு குழந்தைகளும் மனைவியும் தினமும் நான் இரவு வீடு திரும்பியதும்தான் சேர்ந்து சாப்பிடவேண்டும் என்று காத்திருப்பார்கள். எங்கள் குடும்பத்தில் பல ஆண்டுகளாக அது வழக்கமாக உள்ளது.
“இந்த இரண்டு வாரங்கள் என்னால் வீட்டுக்குப் போகமுடியாது. சற்று சிரமமாகத் தான் இருக்கும்,” என்றார் திரு ரவி கதிரேசன். இருப்பினும் வருமானம் தேவையென்பதால் சங்கடங்களைச் சமாளித்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்றனர் சிலர்.
“வியாபாரம் மோசமாக இருப்பதால் என் ஊழியர்களின் விருப்பத்தைக் கேட்டேன். இரு வாரங்களுக்கு மலேசியாவிற்குத் திரும்ப விரும்புவோருக்கு ஊதியமில்லா விடுப்பு வழங்குகிறேன் என்று கூறினேன்.
“ஆனால், அவர்களுக்கு வருமானமில்லாமல் தினசரி செலவுகளை எப்படி சமாளிப்பது என்ற கவலையும் உண்டு,” என்றார் காய்கறி, மளிகைப் பொருட்களை விற்கும் திருவாட்டி சாந்தி கிருஷ்ணன்.
அதிக எண்ணிக்கையில் மலேசிய ஊழியர்கள் தேக்கா சந்தையின் மேல் தளத்தில் உள்ள கடைகளில் பணிபுரிகின்றனர். அவர்கள் யாவரும் இந்த வாரம் மலேசியாவில் இருக்கின்றனர்.
தேக்கா சந்தை ஐந்து நாட்களுக்கு சுத்தம் செய்வதற்கும் பழுது பார்ப்பதற்கும் மூடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடைகள் மூடப்பட்டிருப்பதால் மலேசிய ஊழியர்கள் விடுப்பில் தாய்நாட்டிற்குச் சென்றுள்ளனர்.
“எனது கடையில் பணிபுரியும் ஊழியர்கள் மலேசியா திரும்பிவிட்டனர். நேற்றுக் காலை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உடனே திரும்பச் சொன்னேன். ஜோகூரில் வசிக்கும் ஒருவர் வருவதாகக் கூறினார்.
“மற்றொரு ஊழியர் வழக்கமாக சிங்கப்பூரில் வசிப்பவர். ஆனால் நீண்ட விடுப்பு கிடைத்ததால் தனது பூர்வீகமான பினாங்குக்குச் சென்றுவிட்டார். அவரது வருகை தான் சந்தேகம்,” என்றார் பல ஆண்டுகளாக தேக்கா சந்தையில் துணிக்கடை நடத்திவரும் திரு மல்விந்தர் சிங்.
மலேசியாவில் வசித்து சிங்கப்பூரில் பணிபுரியும் சிங்கப்பூரர்களுக்கும் இந்த அண்மைய கட்டுப்பாட்டு ஆணை சங்கடத்தை ஏற்படுத்திஉள்ளது.
ஜோகூர் பாரு பிளந்தோங் பகுதியில் தம் குடும்பத்தோடு வசித்துவரும் சிங்கப்பூரரான 36 வயது வீ. பிரேம்குமார் புதிய கட்டுப்பாட்டு ஆணையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
பாதுகாவல் அதிகாரியாக இங்கு ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் பிரேம்குமார் தினமும் வேலைக்காக சிங்கப்பூர்-ஜோகூர் கடற்பாலத்தை கடந்து சிங்கப்பூர் வருவது வழக்கம்.
புதிய கட்டுப்பாடுகளால், இவர் சிங்கப்பூரில் உள்ள தம் நிறுவன வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தங்கும் இடத்தில் இரு வாரங்களுக்கு தங்க உள்ளார்.
இதனால் அவரால் தம் மனைவியையும் ஒரு வயது பெண் குழந்தையையும் இரு வாரங்களுக்கு பார்க்க இயலாது.
“இரு வாரங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு நேற்று வீட்டிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டேன்.
“கட்டுப்பாட்டுக் காலத்திற்கு பிறகு என்ன நடக்கவிருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், ” என்றார் திரு பிரேம்குமார்.
விரைவில் கிருமித்தொற்று நிலைமை கட்டுக்குள் வந்து வழக்கமான வாழ்க்கை மீண்டும் திரும்பவேண்டும் என்று பலரும் பிரார்த்திப்பதாகக் கூறினர்.
கூடுதல் செய்தி: ப. பாலசுப்பிரமணியம்