கொவிட்-19 கிருமித்தொற்று சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களில் முதல் நபருக்கு கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி உறுதிபடுத்தப்பட்டது.
39 வயது பங்களாதேஷ் நாட்டு ஊழியரான அவர், ‘தி லியோ’ வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் வசித்தவர்.
அந்த சம்பவத்தினால் சிங்கப்பூரில் பணியாற்றும் பல ஊழியர்களிடையே பீதி ஏற்பட்டது. பலரும் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லத் திட்டமிட்டனர்.
“தொடக்கத்தில் ஊழியர்களிடையே பதற்றம் இருந்தது. கொவிட்-19 கிருமித்தொற்று என்றால் என்ன, அதிலிருந்து எப்படி பாதுகாத்துகொள்வது எப்படி, பாதுகாப்பை உறுதிப்படுத்த என்ன வழிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என்பது போன்ற தகவல்கள் ஊழியர்களுக்குத் தெரியவில்லை. அச்சம் நிறைய இருந்தது,” என்றார் ‘தி லியோ’ வெளிநாட்டு ஊழியர் விடுதியின் செயல்பாட்டு நிர்வாகியான திரு எஸ்.கே.பாவா சாகிப்.
சமூக ஊடங்களில் பரவிய வதந்திகள் ஊழியர்களிடையே ஏற்பட்ட அச்சத்திற்கு ஒரு முக்கிய காரணம் என்றும் உண்மை நிலவரத்தை ஊழியர்களுக்கு விளக்கிய பிறகு லியோ விடுதியில் பதற்றம் குறைந்துள்ளது என்றும் கூறினார் திரு பாவா.
அத்துடன், 4000ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கும் லியோ விடுதியிலிருந்து யாரும் பயந்து சொந்த நாட்டிற்குத் திரும்பவில்லை என்று குறிப்பிட்டார் அவர்.
‘ஃபேஸ்புக்’, ‘வாட்ஸ்ஆப்’ போன்ற சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளைப் பார்த்து தமது குடும்பத்தினர் அச்சப்பட்டனர் என்ற திரு சோலையப்பன் ரவிசங்கர், சிங்கப்பூரைவிட்டு இந்தியாவிற்கு திரும்பி வர தமக்கு அவர்கள் வேண்டுகொள் விடுத்தனர் என்றார்.
“இங்குள்ள நமது சுகாதார பராமரிப்பு வசதிகள், அரசாங்கம் மற்றும் லியோ தங்குவிடுதி எடுத்த கொரோனா பரவல் தடுப்பு முயற்சிகளைப் பற்றி விவரமாக என் குடும்பத்தினருக்கு புரிய வைத்தேன். நாம் தங்கியிருப்பது தனியார் வீட்டில் இல்லை, ஊழியர்களுக்கான முறையான தங்குவிடுதி என்று கூறி குடும்பத்தாருக்கு உறுதியை ஏற்படுத்தினேன். மனிதவள அமைச்சு, அரசாங்கம் நடைமுறைப்படுத்திய வழிமுறைகளுக்கு ஏற்ப, தங்குவிடுதி கவனித்துக்கொள்கிறது என்று குடும்பத்தாரிடம் தெரிவித்து சமாதானப்படுத்தினேன்.
"விடுதியின் நிர்வாக உறுப்பினர்கள் அறைகளுக்கே வந்து, எப்படி பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதைப் பற்றி விளக்குகிறார்கள். கிருமி நாசினி, முகக்கவசங்கள் போன்றவற்றை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பனவற்றையும் கற்றுகொடுக்கிறார்கள்,” என்றார் மூத்த கட்டுமானத் துறை மேற்பார்வையாளரான திரு சோலையப்பன், 39.
லியோ விடுதியின் தூதுவர் குழுவில் கிட்டத்தட்ட 50 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்தியா, பங்களாதேஷ், சீனா, மியன்மார், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் லியோ விடுதியில் தங்கியிருக்கிறார்கள்.
வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த ஊழியர்களை அணுகும் வகையில் தூதுவர் குழுவிலும் பல நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அத்துடன் 365 கட்டடப் பிரிவுகள் (units) கொண்ட லியோ விடுதி ஒவ்வொன்றிலும் ஒரு ஊழியர் தலைவராக இருக்கிறார். இந்த கட்டடப் பிரிவு தலைவர்கள், தூதுவர் குழு உறுப்பினர்கள், விடுதி நிர்வாகத்தினர் ஆகியோர் தினந்தோறும் ஊழியர்களைச் சந்தித்து வருகின்றனர்.
கொவிட்-19 கிருமித் தொற்றைப் பற்றி விளக்கி, ஊழியர்களின் சந்தேகங்களையும் தீர்த்து, பதற்றை குறைத்துள்ளனர் அவர்கள்.
“தொடக்கத்தில், அச்சம் நிறைய இருந்தது. அதைப் பற்றிய விவரங்கள் அப்போது இல்லை. ஆனால் சிங்கப்பூர் அரசாங்கமும் லியோ தங்குவிடுதியும் சேர்ந்து கிருமித்தொற்று குறித்த விளக்கங்களைத் தினந்தோறும் கொடுத்து வருகிறார்கள். பல விஷயங்களைக் கற்றுகொடுத்தார்கள். அத்துடன் உடல் வெப்பநிலையை தினமும் இரண்டு முறை சோதிக்கிறார்கள். கிருமிநாசினியும் முகக்கவசங்களும் வழங்குகிறார்கள். அதனால் நாளடைவில் அச்சம் குறைந்துள்ளது,” என்றார் இந்திய வெளிநாட்டு ஊழியரான திரு முருகேசன் கார்த்திக், 27