பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்றும் நோக்கில் மாணவர்கள் வரும் புதன்கிழமை (ஏப்ரல் 1) முதல் வாரம் ஒரு நாள் வீட்டிலிருந்தவாறே வகுப்புகளில் பங்கேற்க இருக்கிறார்கள்.
தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி, மையப்படுத்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு இந்தப் புதிய நடைமுறை பொருந்தும் என்று கல்வி அமைச்சு நேற்று மாலை தெரிவித்தது.
வெளிநாட்டிலிருந்து வருவோர் மூலம் கொவிட்-19 கிருமித்தொற்று பரவும் சம்பவம் சிங்கப்பூரில் அதிகரித்து வருவதாலும் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாலும் மாணவர்களிடம் இந்தப் புதிய கற்றல் முறை அறிமுகமாகிறது.
அதன்படி, தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று இல்லம் சார்ந்த கற்றலில் ஈடுபடுவார்கள். அதேபோன்று உயர்நிலை மாணவர்கள் வியாழக்கிழமையன்றும் தொடக்கக் கல்லூரி மற்றும் மையப்படுத்தப்பட்ட கல்வி நிலையங்களின் மாணவர்கள் வெள்ளிக்கிழமையன்றும் இந்தப் புதிய முறையில் பாடங்களைக் கற்பர்.
வீட்டிலிருந்து நான்கு முதல் ஐந்து மணி நேரம் மாணவர்கள் பாடம் பயில்வர். அதில் இரண்டு மணி நேரம் மின்னிலக்கக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டிவரும்.
வீட்டிலிருந்தவாறே வகுப்புகளில் பங்கேற்பதற்கான கருவிகளைப் பயன்படுத்துவது பற்றி வரும் திங்கட்கிழமை (மார்ச் 30) மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பள்ளிகள் விளக்கும். கற்றல் தேவைப்படும்போது மின்னிலக்கக் கருவிகளைப் பயன்படுத்தாத மாணவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை பள்ளிகள் வழங்கும்.
“வெளிநாட்டிலிருந்து கிருமித்தொற்று சம்பவங்கள் அண்மையில் அதிகரித்ததைத் தொடர்ந்து கொவிட்-19 கிருமியை எதிர்த்துப் போராட வேண்டிய புதிய கட்டத்தில் சிங்கப்பூர் உள்ளது.
“எனவே பாதுகாப்பான இடைவெளி என்னும் நடைமுறையை ஆதரிக்கும் வண்ணம் பள்ளிகள் படிப்படியாக பலதரப்பட்ட கற்றல் முறைகளுக்கு மாறவேண்டி உள்ளன. அதன் தொடக்கமாக வாரம் ஒரு நாள் இல்லம் சார்ந்த கற்றல் அறிமுகம் செய்யப்படுகிறது,” என்று அமைச்சு கூறியது.
இந்த ஏற்பாட்டின் மூலம் கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகள் பாதிக்கப்படமாட்டா.
தேவைப்படும்போது மேலும் அதிக நாட்கள் வீட்டிலிருந்து கற்கும் நடைமுறைக்கு தயாராகிக்கொள்ள மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இந்தப் புதிய நடவடிக்கை உதவும் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் செய்தியாளர்களிடம் கூறினார்.
“வீட்டிலிருந்து வகுப்புகளில் கலந்துகொள்ளும் அந்த ஒரு நாள் தவிர வாரத்தில் எஞ்சிய நாட்களில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது கூட்டத்தைக் குறைக்கும் வண்ணம் பள்ளிகள் மாறுபட்ட நேரங்களை வகுக்கும். பொதுப் போக்குவரத்து மூலம் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பும் மாணவர்கள் இதனால் பயன் பெறுவர்.
“கிருமி பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சிங்கப்பூர் கடந்த வாரங்களில் படிப்படியாகத் தீவிரப்படுத்தி வருகிறது. மக்கள் வாழ்க்கையில் பெரும் பகுதியை வகிக்கும் பள்ளிகளில் நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டி உள்ளது.
“எனவே பள்ளிகளை மூடும்படியான நிலைமையை ஏற்படுத்தும் வியப்பான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடுவதை நாங்கள் விரும்பவில்லை.
“பள்ளிகளை திடீரென்று கட்டாயமாக மூட வேண்டிய அவசியம் பல நாடுகளுக்கு ஏற்பட்டு உள்ளது. ஆனால் சிங்கப்பூருக்கு அதைத் தவிர்த்து மற்ற தெரிவுகள் உள்ளன,” என்றார் அமைச்சர். இந்த கற்றல் ஏற்பாடு எதுவரை நடப்பில் இருக்கும் என்று கேட்ட தற்குப் பதிலளித்த அமைச்சர் ஓங், “எவ்வளவு நாட்களுக்கு கிருமியின் தாக்கம் இருக்கும் என்பதைப் பொறுத்தது அது,” என்றார்.
பள்ளிகள் ஏன் மூடப்படவில்லை: பிரதமர் லீ விளக்கம்:
பள்ளிகள் மூடப்பட்டு பெற்றோர் தங்களது பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள வீட்டில் இல்லாமற்போனால் அந்தப் பிள்ளைகள் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகும் ஆபத்து அதிகம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
“பள்ளிகள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் உள்ளவை. அவை மூடப்பட்டால் எல்லா பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை வீட்டிலிருந்து கவனித்துக்கொள்வார்கள் என்று சொல்ல முடியாது.
"பள்ளிகளைத் திறக்காவிட்டால் உங்களது பிரச்சினை தீர்ந்துவிட்டதாக அர்த்தமாகாது. காரணம் அந்தப் பிள்ளைகள் எங்கே போவார்கள்? அப்படிப்பட்ட சூழலில் அருகில் உள்ள கடைகளுக்குச் செல்வார்கள் அல்லது சுற்றித் திரிவார்கள்.
"அது கொவிட்-19 கிருமி தொற்றுவதற்கான வாய்ப்பாக அமைந்துவிடும்,” என்றார் பிரதமர்.
#சிங்கப்பூர் #பள்ளி