வேலையிடங்களுக்கு வந்து பணிபுரியவேண்டிய அவசியம் இல்லாத நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே பணிபுரிய வைக்கவேண்டும்.
அதற்கான எந்த முயற்சியும் எடுக்காத நிறுவனங்களுக்கு வேலை நிறுத்த ஆணை பிறப்பிக்கப்படும். அமலாக்க நடவடிக்கைகளைக் கடுமையாக்க அரசாங்கம் ஒழுங்கு விதிகளை மாற்றம் செய்யும். கொவிட்-19 கிருமித் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த
எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளை மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
வீட்டிலிருந்து பணிபுரியும் சாத்தியம் இருப்பினும் அதற்கான முயற்சியை எடுக்காத நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்படலாம்.
வரும் வாரங்களில் மனிதவள அமைச்சு அமலாக்க நடவடிக்கைகளை அதிகரிக்கவுள்ளது. முடிந்தவரை சிறப்பான முயற்சிகளை நிறுவனங்கள் எடுத்திருப்பதை உறுதிசெய்வது அதன் நோக்கம். வீட்டிலிருந்து பணிபுரிதலை நிறுவனங்கள் நடைமுறைப்படுத்த உதவ ‘வேலைவாழ்க்கை’ மானியம் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.
கடந்த மார்ச் 26ஆம் தேதி மனிதவள அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை நிறுவனங்கள் உறுதிசெய்யவேண்டும் என்று கூறியிருந்தது.
அதற்கு முன்னோடியாக பொதுத் துறை இயன்றவரை ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை நடைமுறைபடுத்தியுள்ளது.
உதாரணத்திற்கு, நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் 90% ஊழியர்கள் தற்போது வீட்டில்இருந்து பணிபுரிகின்றனர்.
தகவல் தொழில்நுட்ப, ஊடக மேம்பாட்டு ஆணையத்திலும் ஏறத்தாழ 90 விழுக்காட்டினர் அவ்வாறு செய்கின்றனர். சில நிறுவனங்கள் முற்றிலும் வீட்டிலிருந்தபடியே பணிபுரியும் ஏற்பாட்டைச் செய்துள்ளன என்று கூறிய அவர், மத்திய வர்த்தக வட்டாரத்தில் அதிகாரிகளின் கணிப்புப்படி 40 விழுக்காட்டினர் மட்டுமே வீட்டில் இருந்து பணிபுரிவதாகத் தெரிவித்தார்.
சில நாட்களில் அல்லது சில வேளைகளில் மட்டும் இந்த முறையை நடைமுறைப்படுத்தாமல் எல்லா நேரங்களிலும் எல்லா நாட்களிலும் வீட்டிலிருந்து வேலை செய்வதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அமைச்சர். உற்பத்தித் துறை, தயாரிப்புப் பணி போன்றவற்றில் வீட்டில் இருந்தபடி பணிபுரிவது சாத்தியப்படாத பட்சத்தில் ஊழியர்களுக்கு மத்தியிலும் வாடிக்கையாளர்கள் விநியோகிப்பாளர்களுடன் உரையாடும்போதும் பாதுகாப்பான இடைவெளியை உறுதிசெய்யவேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஊழியர்கள் பணிக்கு வரும் நேரத்தையும் வீடு திரும்பும் நேரத்தையும் மாற்றி அமைப்பதையும் நிறுவனங்கள் செயல்படுத்தலாம்.
உள்ளூரில் பரவிய கொவிட்-19 கிருமித் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கும் பட்சத்தில் முதியோர் போன்ற எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவற்களைப் பாதுகாப்பான இடைவெளி மூலம் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அமைச்சுகள்நிலை பணிக்குழு வலியுறுத்தியுள்ளது.
அனைத்து பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகளையும் சிங்கப்பூரர்கள் நேர்மையாகப் பின்பற்றினால் கிருமித் தொற்றுப் பரவுவதை மெதுவடையச் செய்யலாம் என்று கூறினார் பணிக்குழுவின் இணைத் தலைவரான தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங். முதியோர்களிடம் உரையாடும்போது மக்கள் கைகளைக் கழுவவேண்டும். உடல்நலமில்லாதோர் முதியோரைச் சந்திப்பதைத் தவிர்க்கவேண்டும் என்று பணிக்குழுவின் இணைத் தலைவர்கள் கூறினர்.
#சிங்கப்பூர் #கொவிட்-19