கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பில் நேற்று முன்தினம் பிரதமர் லீ சியன் லூங் ஆற்றிய உரையை முன்னிட்டு தீவு முழுவதும் உள்ள பேரங்காடிகளில் பலரும் பதற்றத்துடன் பொருட்கள் வாங்கினர்.
அது தொடர்பான காணொளிகளும் படங்களும் சமூக ஊடகங்களில் வலம் வந்தன.
அந்த வரிசையில் லிட்டில் இந்தியாவிலுள்ள சில கடைகளும் சேர்ந்தன. டன்லப் ஸ்திரீட்டில் அமைந்துள்ள ‘சென்னை டிரேடிங் அண்ட் சூப்பர்மார்ட்’ கடைக்கு வெளியே பலரும் கூட்ட நெரிசலுக்கு இடையே காய்கறிகள் வாங்கும் படங்களும் காணொளிகளும் வாட்ஸ்அப் மூலம் தமிழ் முரசுக்கு அனுப்பப்பட்டன.
“வெள்ளிக்கிழமை அன்றே இரண்டு முறை பாசிர் பாஞ்சாங் மொத்த வியாபாரச் சந்தைக்குச் சென்று, என் நிறுவனத்தின் கடை களிலுள்ள சரக்குகளை மீண்டும் நிரப்ப வேண்டியிருந்தது.
“எங்களிடம் மூன்று லாரிகள் உள்ளன; அவற்றைப் பயன்படுத்தினோம். இது சாதாரணமாக நடக்காது. பிற்பகல் 3 மணி அளவிலேயே பெரும்பாலான காய்கறிகள் விற்றுபோய்விட்டன, மீண்டும் வாங்கவேண்டியிருந்தது.
“மற்ற நாட்களில் காலையில் ஒரு முறை மொத்த வியாபாரச் சந்தையிலிருந்து வரும் காய்கறிகள் எங் களுக்கு ஒரு நாளுக்குப் போது மானது,” என்றார் ‘சென்னை டிரேடிங் அண்ட் சூப்பர்மார்ட்’ நிறுவனத்தின் உரிமையாளர் திரு வை. ராமமூர்த்தி.
தீவு முழுவதும் உள்ள சென்னை டிரேடிங் நிறுவனத்தின் ஏழு கடை களிலும் பதற்றத்தில் விற்பனைகள் நடந்ததாகவும் பலர் அரிசி, முட்டை, இறைச்சி போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களை மக்கள் அளவுக்கு அதிகமாக வாங்கிச் சென்றதாகவும் குறிப்பிட்டார் அவர்.
“தேவையான காய்கறி, உணவுப் பொருட்கள் சிங்கப்பூருக்கு எப் போதும் போல வந்துகொண்டுதான் இருக்கின்றன. பதற்றப்பட்டு பொருட்கள் வாங்க வேண்டும் என்பதற்கு அவசியமே இல்லை.
“தினமும் மலேசியாவுடனான வர்த்தகம் வழக்கமாகவே நடந்து வருகிறது. நிறைய உணவுப்பொருட்கள் அங்கிருந்து வருகின்றன.
“சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பி அவசியமில்லாமல் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கவும்,” என்று தெரிவித்தார் திரு ராமமூர்த்தி.