போக்குவரத்துக்கு எதிர்திசையில் லாரியை ஓட்டிய குற்றத்துக்காக 28 வயது ஆடவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
தெம்பனிஸ் விரைவுச்சாலையில் அவர் போக்குவரத்து எதிர்திசையில் லாரி ஓட்டுவரைத் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் வலம் வந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து கடந்த வியாழக்கிழமை இரவு 11.40 மணி அளவில் பொதுமக்களிடமிருந்து பல அழைப்புகள் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
போக்குவரத்துக்கு எதிர்திசையில் அந்த மஞ்சள் நிறலாரி மிக வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் காட்சி சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
லாரி எதிர்திசையில் மிக வேகமாகச் செல்வதை அங்கிருந்த மற்ற கார்களில் உள்ள கேமராக்கள் பதிவு செய்தன. விபத்தைத் தவிர்க்க எதிர்திசையில் சென்றுகொண்டிருந்த அந்த லாரிக்கு கார்கள் வழிவிட்டன.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக அந்த லாரி ஓட்டுநர் நேற்று (ஏப்ரல்11) கைது செய்யப்பட்டார். அவரது ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது தொடர்பாக முதல்முறை கைது செய்யப்படுவோருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இரண்டாவது முறை கைது செய்யப்படுவோருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மேலும் அவர்களது ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம் என்று போலிசார் தெரிவித்தனர்.