பொது இடத்தில் முகக்கவசம் சம்பந்தப்பட்ட பிரச்சினையை ஏற்படுத்தியதன் தொடர்பில் இரண்டாவது நபர் மனநல மருந்தகத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
முகக்கவசத்தை முறையாக அணியாத கஸ்தூரி கோவிந்தசாமி ரெத்னசுவாமி, 40, அடையாளத்தை அறிய வந்த போலிசார் மீது வேண்டுமென்றே காயம் விளைவிக்க முனைந்ததாகவும் கூறப்பட்டது.
இன்று அவர் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
செம்பவாங்கில் அமைந்துள்ள சன் பிளாசா கடைத்தொகுதியில் கடந்த 7ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தால் அவர் கைது செய்யப்பட்டார். சம்பவம் காணொளி மூலம் பதிவாகியுள்ளது.
அவர் இருவரை அவமதித்ததாகவும் முகக் கவசத்தை முறையாக அணியாமல் இருந்ததாகவும் நம்பப்படுகிறது.
கடந்த மாதம் 29ஆம் தேதி, அதே கடைத்தொகுதியில் முகக் கவசத்தை அணியாமல் இருந்ததற்காக அவருக்கு 300 வெள்ளி அபாரதம் விதிக்கப்பட்டது.
அந்தச் சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வலம் வந்தது.
முகக் கவசத்தை முறையாக அணியாததற்காக கொவிட்-19 (தற்காலிகத் தடுப்பு உத்தரவு) விதிமுறை 2020 சட்டத்தின்கீழ் அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
வேண்டுமென்றே காயம் விளைவித்ததோடு, அதிகாரியைத் தமது பணியைச் செய்யவிடாமல் தடுத்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.