எதிர்வரும் 2021ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் தொடக்கக் கல்லூரிகளுக்கும் செல்வொர் நாளை தொடங்கும் நேரடி மாணவர் சேர்க்கை மூலம் பதிவுசெய்துகொள்ளலாம்.
கொவிட்-19 கிருமித் தொற்று சூழலால் தெரிவு முறை இணையம் வழி செய்யப்படும்.
மொத்தம் 146 உயர்நிலைப் பள்ளிகளும் 20 தொடக்கக் கல்லூரிகளும் இவ்வாண்டின் நேரடி மாணவர் சேர்க்கை திட்டத்தில் பங்கெடுக்கின்றன. கல்வி அடிப்படையிலான தேர்ச்சியைத் தாண்டி மாணவர்களின் சாதனைகளையும் திறன்களையும் கொண்டு உயர்நிலைப் பள்ளியிலோ தொடக்கக் கல்லூரியிலோ மாணவர்கள் சேர்வதற்கு இத்திட்டம் வாய்ப்பளிக்கிறது.
விளையாட்டு, கலைகள் போன்ற கல்விக்கு அப்பாற்பட்ட அம்சங்களில் மாணவர்களின் திறன்களை அங்கீகரிக்கும் வண்ணம் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
தொடக்கப் பள்ளி இறுதியாண்டு தேர்வுகளை மாணவர்கள் எழுதும் முன்னரே உயர்நிலைப் பள்ளியில் இடம் கிடைக்க வழிச் செய்கிறது.
கொரோனா கிருமித் தொற்று காரணமாக மாணவர்கள், பள்ளி அதிகாரிகளின் பாதுகாப்பு கருதி நேர்முகத் தேர்வை பள்ளிகள் நடத்தாது.
மாறாக அடையாளம் காணப்பட்ட மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வு மின்னிலக்க முறையில் செய்யப்படும்.
உயர்நிலைப் பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பிப்போருக்கு மாணவரின் தொடக்கப் பள்ளியிலும் தொடக்கக் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பொப்போருக்கு மாணவரின் உயர்நிலைப் பள்ளியிலும் மின்னிலக்க முறையிலான நேர்முகத் தேர்வு நடைபெறும்.
வெவ்வேறு பள்ளிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கிடையில் தொடர்பு இல்லாததை உறுதிசெய்யும் வகையில் பாதுகாப்பான இடைவெளியை கவனத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உயர்நிலைப் பள்ளிக்கான நேரடி மாணவர் சேர்க்கை தெரிவுகள் ஜூலை 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 14 ஆம் தேதி வரையில் நடைபெறும் என்றும் தொடக்கக் கல்லூரி சேக்கைக்கான தெரிவுகள் ஜூன் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சென்ற ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை இந்த ஆண்டும் சேர்க்க இத்திட்டம் முயலும் என்று சென்ற வாரம் கூறினார் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்.
உயர்நிலைப் பள்ளி நேரடி மாணவர் சேர்க்கையின் மூலம் சென்ற ஆண்டு 3,500 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.