சிங்கப்பூரில் கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்த ஏப்ரல் 7ஆம் தேதியிலிருந்து குடும்ப வன்முறை அதிகரித்துவிட்டது என்று போலிஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் தாங்களாகவே முன்வந்து குடும்ப வன்முறைக்கு அதிகம் ஆளாகக்கூடிய அபாயத்தில் இருப்பவர்களுக்கு உதவி வருகின்றனர்.
இவ்வாண்டு ஏப்ரல் 7ஆம் தேதியிலிருந்து இம்மாதம் 6ஆம் தேதிவரை குடும்ப வன்முறை தொடர்பாக தங்களுக்கு 476 புகார்கள் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்து இருக்கிறது.
இது கிருமித்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட நோய்ப் பரவல் முறியடிப்பு காலகட்டத்துக்கு முன்னர் இருந்த 389 புகார்களுடன் ஒப்பிடுகையில் 22% அதிகம் என்று போலிசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கின்றனர்.
காயம் விளைவிப்பது, வன்முறையில் ஈடுபடுவது, தாக்குதல் நடத்துவது, தாக்குதல் மேற்கொள்ளப்போவதாக மிரட்டுவது ஆகியவற்றுடன் தவறாக ஒருவரை அடைத்து வைப்பது போன்றவை தொடர்பாக புகார்கள் வந்துள்ளதாக போலிசார் கூறுகின்றனர்.
இதில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மேலும் பாதிப்பு அடையக்கூடிய சாத்தியத்தை போலிசார் மதிப்பிட்டு, அதிக பாதிப்படையக்கூடிய அபாயத்தில் உள்ளவர்களை, அவர்கள் கேட்டுக்கொள்ளவில்லை என்றாலும், சமூக சேவை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பர்.
மேலும், வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களை போலிசார் அடிக்கடி தொடர்புகொண்டு அவர்களுக்கு மேலும் உதவி தேவைப்படுகிறதா என்பதைக் கண்டறிவர் என்று போலிஸ் அறிக்கை தெரிவிக்கிறது.