பிடோக் நார்த்தில் உள்ள ஒரு குடியிருப்பின் குப்பைத் தொட்டியில் தம் பச்சிளம் குழந்தையைக் கடந்த ஜனவரி மாதத்தில் கைவிட்ட பெண், மூன்று மாதங்களுக்கு காவலில் இருந்த நிலையில் அவர் தொடர்பான விசாரணையைத் துரிதப்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.
26 வயதான அந்தப் பெண், பிப்ரவரி மாதம் 15ஆம் தேதியிலிருந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 7ஆம் தேதி காலை 6.15 மணியளவில், தனது ஆண் மகவைக் கைவிடும் நோக்கில் பிளாஸ்டிக் பையில் சுற்றி புளோக் 534 பிடோக் நார்த் ஸ்திரீட் 3ல் உள்ள குப்பைத்தொட்டிக்குள் அந்தப் பெண் வீசியதாகக் கூறப்பட்டது.
ரத்தக்கறை படிந்த, பேரங்காடி ஒன்றின் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டிருந்த அந்தக் குழந்தையை, குப்பைத்தொட்டியைச் சுத்தம் செய்யும் துப்புரவாளர்கள் கண்டுபிடித்தனர்.
நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட பிறகு அந்தப் பெண்ணின் மனநலத்தைக் கணிப்பதற்காக அவர் மன நலக் கழகத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
மன நலக் கழகத்திலிருந்து அறிக்கைகளைப் பெற்று விசாரணையை முடிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரினார்.
அந்தப் பெண் மீண்டும் ஜூன் மாதம் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று சிஎன்ஏ செய்தி குறிப்பிட்டது.
தம்முடைய மகனைப் பார்ப்பதற்காக காவலில் இருந்து வீடு திரும்ப அந்தப் பெண் விரும்புவதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குழந்தையைக் கைவிடும் நோக்கத்துடன் குழந்தையை வீசியது நிரூபிக்கப்பட்டால் அந்தப் பெண்ணுக்கு ஏழாண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.