சிங்கப்பூரில் கடந்த 34 ஆண்டுகளாக இயங்கி வரும் சைவ உணவகமான அன்னலட்சுமி, உணவு வழங்கும் சமூக தொண்டுக்காகப் பெயர் பெற்றது.
கொவிட்-19 நோய் பரவல் நம்மை ஆட்டிப்படைத்து வரும் இந்த காலகட்டத்தில், வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறது அன்னலட்சுமி.
‘இட்ஸ்ரெயினிங்ரெயின்கோட்ஸ்’ என்ற சமூக நல அமைப்பின் ஆதரவில் ஒரு நாளுக்கு 500க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்களை ஊழியர்களுக்கு வழங்குகிறது அன்னலட்சுமி உணவகம்.
பிடாடாரி, தெம்பனிஸ், பொங்கோல், துவாஸ், ஈசூன் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள கட்டுமானத் தளங்களில் உள்ள குடியிருப்புகள், தங்கும் விடுதிகள் ஆகிய இருப்பிடங்களில் வசிக்கும் ஊழியர்களுக்கு அந்த உணவு வழங்கப்படுகிறது.
ஏப்ரல் 20 தொடங்கிய இந்தச் சமூக நல முயற்சி, அடுத்த மாதம் 1ஆம் தேதி வரை நீடிக்கும் என்று கூறினார் அன்னலட்சுமி உணவகத்தின் துணை செயல்பாட்டு நிர்வாகி, திரு ஹரிஷ் மேனன், 31.
தொடக்கத்தில் பிடாடாரி கட்டுமானத் தளத்தில் வசித்த ஏறத்தாழ 50 ஊழியர்களுக்கு உணவு வழங்கத் தொடங்கி காலப்போக்கில் உணவு தேவைகள் அதிகரிக்க தமது இலவச உணவு விநியோகிப்பையும் அன்னலட்சுமி அதிகரித்தது என்றார் ஹரிஷ்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான இந்த முயற்சி ஒரு புறம் இருக்க, ஸ்ரீ நாராயண மிஷன், சன்லவ் இல்லம் ஆகிய தாதிமை இல்லங்களுக்கும் வாரந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்களை வழங்குகிறது அன்னலட்சுமி உணவகம். அதோடு ‘வில்லிங் ஹார்ட்ஸ்’ என்ற அறநிறுவன அமைப்பின் முயற்சிகளுக்கும் கைகொடுத்து வருகிறது அன்னலட்சுமி.
முழுமையான செய்தியைப் படிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online