தாம் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவர் எனக் கூறிக்கொண்டு, பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் மீது நேற்று மேலும் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பரம்ஜீத் கவுர், 41, என்ற இந்த சிங்கப்பூர் பெண்மணி, இம்மாதத் தொடக்கத்தில் ஷுன்ஃபு சந்தைப் பகுதியில் முகக்கவசம் அணியாமல் மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
இந்த நிலையில், கடந்த மாதம் 26ஆம் தேதி இரவு 7.45 மணியளவில் அப்பர் தாம்சன் சாலையில் உள்ள உணவுக் கடைக்குச் சென்றபோது மூக்கையும் வாயையும் மறைக்கும் வகையில் முகக்கவசம் அணியத் தவறியதாக அவர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வேறு வீட்டிற்கு மாறிய 28 நாட்களுக்குள் அது பற்றி பதிவு அலுவலரிடம் அவர் தகவல் தெரிவிக்கத் தவறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இப்போது திரு அனில் சிங் சந்து என்ற வழக்கறிஞர் திருவாட்டி கவுரைப் பிரதிநிதிக்கிறார். திருவாட்டி கவுருக்கு $10,000 பிணைத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.