காலால் உதைத்து செலுத்தக்கூடிய ஸ்கூட்டரை குழந்தை ஒன்று சாலையின் நடுவில் அபாயகரமான சூழலில் ஓட்டிச் சென்ற சம்பவம் ஈசூனில் நிகழ்ந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக, விபத்து ஏதும் நிகழ்வதற்கு முன்பாக, துணிச்சல் மிகுந்த சைக்கிளோட்டி ஒருவர், தமது சைக்கிளை நிறுத்தி, அந்தக் குழந்தையையும் அதன் ஸ்கூட்டரையும் தூக்கிக்கொண்டு பாதுகாப்பான இடத்தில் விட்டார்.
இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி ஒன்று ஃபேஸ்புக்கில் வலம் வந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த நேரத் தகவலின்படி, இந்தச் சம்பவம் இம்மாதம் 15ஆம் தேதி மாலை சுமார் 5.41 மணிக்கு நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
ஈசூன் அவென்யூ 8ல் சாலையின் நடு தடத்தில் அந்தக் குழந்தை ஸ்கூட்டரை ஓட்டிச் செல்வதை காணொளியில் காண முடிந்தது. சாலைப் பிரிவில் நின்றுகொண்டிருந்த ஆடவர் ஒருவர் குழந்தையைக் காட்டி சைகை செய்வதையும் காணொளி காட்டியது.
அந்தக் குழந்தையைப் பார்த்ததும் சைக்கிளை உடனடியாக நிறுத்திய அந்த சைக்கிளோட்டி குழந்தையையும் அதன் சைக்கிளையும் தூக்கிக்கொண்டு சாலையின் ஓரத்தை நோக்கிச் சென்றார்.
சைக்கிளோட்டிதான் அந்தக் குழந்தையின் தந்தையா என்று இணையத்தில் வாதங்கள் தொடர்ந்தாலும், துணிச்சலுடன் தனது உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றிய சைக்கிளோட்டியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்தக் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் எங்கே? குழந்தை எப்படி அங்கு வந்தது என்பது பற்றிய வினாக்களும் எழுந்துள்ளன.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் துடிப்பான நடமாட்டச் சட்டத்தின்கீழ் சாலையில் ஸ்கூட்டர் ஓட்டுவது சட்டத்துக்குப் புறம்பானது.
காலால் உதைத்து செலுத்தக்கூடிய ஸ்கூட்டர்களை நடைபாதை, சைக்கிள் பாதை ஆகியவற்றில் மட்டுமே பயன்படுத்த முடியும்.