கொவிட்-19 கிருமிப் பரவலால் ஏற்பட்டுள்ள சவால்மிக்க காலத்தில், சமூக அமைப்புகளும் சமய குழுக்களும் கொண்டுள்ள பங்கை மறுபரீசிலனைச் செய்வதற்கு உகந்த வாய்ப்பு தற்போது கிட்டியிருக்கிறது என்று கூறினார் முன்னாள் அமைச்சரான திரு யாக்கூப் இப்ராஹிம்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு சிங்கப்பூர் நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம் ஏற்பாடு செய்திருந்த இணையக் காணொளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார் திரு யாக்கூப்.
“முஸ்லிம் குழுக்கள் மட்டுமில்லாமல் சிங்கப்பூரிலுள்ள அனைத்து சமய குழுக்களையும் எண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன். சீக்கியர்கள் அனைவருக்கும் உணவு சமைப்பதை அறிகிறேன். விநியோகிப்பிற்கு உதவியவர்களையும் தெரியும். சமூகத்தில் உள்ள வசதி குறைந்தவர்களுக்கு உதவ இதர தேவாலயங்கள் செய்யும் நடவடிக்கைகளும் தெரியும். இந்த சம்பவம் மூலம் சமயங்களின் ஆக்கபூர்வமான பங்கு தென்பட்டுள்ளது. இதை நாம் கட்டிக்காக்கவேண்டும். சிங்கப்பூர் போன்ற இடத்தில் மட்டும்தான் நம் சமயத்திற்கு மட்டும் இல்லாமல், அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் நம் சமயக் கொள்கைகளை வெளிப்படுத்த முடியும்,” என்றார் திரு யாக்கூப்.
முன்னதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சராக இருந்த திரு யாக்கூப், கொவிட்-19 உருவாக்கியுள்ள நிலையற்ற சூழலில் கலாசாரம், மரபுடைமை, வரலாறு ஆகியவை வகிக்கும் முக்கிய பங்கைப் பற்றி மேலும் வலியுறுத்தினார்.
நேற்றைய நிகழ்வில் ஏறத்தாழ 25 அடித்தள, சமூக, சமயத் தலைவர்கள் ‘சூம்’ நேரடி காணொளி வசதி மூலம் சந்தித்தனர்.
இந்திய முஸ்லிம் சம்மேளனம், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் ஆகிய இந்திய அமைப்புகள் உட்பட மலாய் முஸ்லிம் அமைப்புகளும் கலந்துகொண்டன.
அத்துடன் ‘டாவோயிஸ்ட் மிஷன் (சிங்கப்பூர்)’, இன, சமய நன்னம்பிக்கைக் குழுக்களின் உறுப்பினரும் சீக்கியருமான திரு சர்ஜித் சிங், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா), ஸ்ரீ நாராயண மிஷன், இந்து அறக்கட்டளை வாரியம், நற்பணிப் பேரவை போன்ற சமூகத்தின் பல்வேறு அமைப்புகள் நிகழ்வில் கலந்துகொண்டன.
விழாக்கால உணர்வு மேலோங்கிய நோன்புப் பெருநாளில் அனைவரும் சமய நல்லிணக்க உறுதிமொழியை எடுத்தனர்.
நாகூர் தர்கா இந்திய மரபுடைமை நிலையம் அதன் வரலாற்றை விவரித்ததுடன், ஒவ்வொரு தலைவரும் ஒரு நிமிடத்திற்கு தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
ஏறத்தாழ 500 இந்திய முஸ்லிம் குடும்பங்களுக்கு தலா $120 ரொக்க அன்பளிப்பை சிண்டா வழங்கியுள்ளதாக சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன் தெரிவித்தார்.
“கொவிட் காரணத்தால் அவதியுறும் பலருக்கும் சிண்டா உதவி வருகிறது. தெரிந்த பலரையும் அணுகி சிண்டா உதவி வழங்கியுள்ளது. ஆனால் பல காரணங்களால் உதவி நாடாதவர்களும் உள்ளனர். இவ்வாண்டு நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர்களுக்கு உதவ முனைந்தோம்,” என்றார் திரு அன்பரசு.
சிங்கப்பூரர்கள் பாதுகாப்பாக இருந்து, ஒன்றிணைந்து கொவிட்-19 கிருமித்தொற்றை முறியடித்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவேண்டும் என்று கூறினார் சிங்கப்பூர் நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையத்தின் தலைவர் திரு முஹம்மது அப்துல் ஜலீல்.