கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான முயற்சியில் தங்களது குடும்பங்களைப் பிரிந்து ராணுவத் தளங்களில் தங்கும் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை அதிகாரிகளில் முதலாம் வாரண்ட் அதிகாரி விஜய்குமாரும் ஒருவர்.
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையில் கொவிட்-19 கிருமிப் பரவலின்போது அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் 127 படைப் பிரிவைச் சேர்ந்த அவர், தமது வேலையிடமான செம்பவாங் ஆகாயப் படைத்தளத்தில் தங்கியிருக்க வேண்டும்.
போர் விமானிகள் பயன்படுத்தும் போர் விமானத்தின் பின்புறப் பகுதியின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பணியைச் செய்யும் 45 வயது அதிகாரி விஜய்குமாருக்கு குடும்பத்தினரை விட்டுப் பிரிந்து தனித்திருப்பது புதிதல்ல.
“ராணுவப் பயிற்சிகளுக்காக நான் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்வேன். ‘சார்ஸ்’, ‘எச்1என்1’ கிருமிப் பரவலின்போது வேலை மற்றும் உயர்கல்வி நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் சென்ற எனக்கு சிங்கப்பூரில் இருக்கும்போதே ஒரு தொற்றுநோயை எதிர்கொள்வது இது முதல் முறை,” என்று அவர் தெரிவித்தார்.
போர் விமானப் பயிற்சிகள் தற்போது குறைந்தபட்ச அளவிற்குக் குறைக்கப்பட்டதுடன் அதிகாரிகள் விமானத்தில் ஏறும்வரை முகக்கவசங்களை அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதுபோன்ற நடவடிக்கைகளால் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தாலும் தமது நினைவுக்கு அடிக்கடி வருவது தமது இரு பிள்ளைகளும்தான் என்று அதிகாரி விஜய்குமார் கூறினார்.
“சுழற்சி முறையில் நான் எனது வேலையிடத்தில் தங்குவேன். ஒவ்வொரு சுழற்சியும் ஓரிரு வாரங்கள் நீடிக்கும். தற்போது நடைபெறுவது என் இரண்டாவது சுழற்சி,” என்று 25 ஆண்டுகளாக ஆகாயப்படையில் பணிபுரியும் அதிகாரி விஜய்குமார் தெரிவித்தார்.
ராணுவத் தளங்களிலிருந்து மேற்கொள்ளப்படும் வெளித் தொடர்புகளின் மீது பல கட்டுப்பாடுகள் இருந்தாலும் நோய்ப் பரவல் சூழலில் தமது குடும்பத்தினருடன் காணொளி வழி உரையாட சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை ஏற்பாடு செய்திருப்பதாக திரு விஜய்குமார் தெரிவித்தார்.
காணொளி வழி உரையாடுவதால் தமது குடும்பத்தினரின் குரலைக் கேட்பதுடன் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைக் கண்கூடாகக் காண முடிவது நிம்மதியை அளிப்பதாக திரு விஜய்குமார் கூறினார்.
“பிள்ளைகளுடன் அவர் அடிக்கடி பேசுவார். அப்பா என்றாலே அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். சில நேரங்களில் எனக்குத் தெரியாமலேயே அவர்களுக்கு பணமாற்றங்களைச் செய்து பிடித்தவற்றை வாங்கச் சொல்லுவார்,” என்று விஜய்குமாரின் மனைவியும் பாலர் பள்ளி தலைமையாசிரியருமான 44 வயது வித்யா சுரேந்திரன் தெரிவித்தார்.
நாட்டுக்கு தந்தை ஆற்றும் சேவையால் மிகவும் பெருமையடைவதாக அவர்களது 20 வயது மகன் விவேக்கும் 19 வயது மகள் வினித்ராவும் தெரிவித்தனர்.
வீடு திரும்பும்போது குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து ‘ஸ்டீம்போட்’ சாப்பிட ஆசைப்படுகிறார் முதலாம் வாரண்ட் அதிகாரி விஜய்குமார்.