சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கொரோனா கிருமித்தொற்று தொடர்பில் வெளியுறவுக் கொள்கை (Foreign Policy) என்ற அமெரிக்க சஞ்சிகையில் இடம்பெற்ற ஒரு கட்டுரை தொடர்பில் அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர் விளக்கம் அளித்துள்ளார்.
விடுதிகளில் தலைகாட்டிய கிருமித்தொற்று தொடர்பில் சிங்கப்பூர் செயல்பட்ட விதம் பற்றிய சரியில்லாத தகவல்கள் அந்தக் கட்டுரையில் இடம்பெற்று இருப்பதாக தூதர் அசோக் குமார் மிர்பூரி கடிதம் ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
கொவிட்-19 கிருமி தொடர்பில் சிங்கப்பூர் செயல்பட்ட விதம் அறிவியல் பூர்வமானது என்றும் அந்த நோய் பற்றி சிறந்த முறையில் புரிந்துகொண்டு சிங்கப்பூர் செயல்பட்டு இருக்கிறது என்றும் மக்கள் தொகையின் அனைத்து பிரிவினர் இடத்திலும் இந்த அணுகுமுறையே கடைப்பிடிக்கப்பட்டு இருக்கிறது என்றும் தூதர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊழியர்களின் நல்வாழ்விற்கான எந்த அணுகுமுறையும் நடைமுறை சாத்தியங்களைக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ள தூதர், சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள், தொற்றுக்குப் பிறகும் தொடர்ந்து சிங்கப்பூரில் வேலை பார்ப்பதையே விரும்பினர் என்றும் இதுவே அந்தக் கட்டுரை சரியில்லை என்பதை எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவித்து உள்ளார். சிங்கப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் தற்காலிக செய்தியாளருமான கிறிஸ்டன் ஹான் என்பவர் மே 6ஆம் தேதி வெளிநாட்டு ‘‘ஊழியர்களும் மக்கள்தான் என்பதை மறக்க சிங்கப்பூர் முயல்கிறதா’’ என்ற தலைப்பில் அந்தக் கட்டு ரையை எழுதி இருந்தார்.
அவர் அரசாங்கத்தின் அணுகு முறையைக் குறைகூறி இருந்தார்.
இதனையடுத்து அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர், மே 21ஆம் தேதி ஒரு கடிதத்தை அந்தச் சஞ்சிகையின் தலைமைச் செய்தி ஆசிரியரான ஜோனாத்தன் டெப்பர்மென்னுக்கு எழுதினார்.
சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு மே 27ஆம் தேதி அந்தக் கடிதத்தை தன்னுடைய இணையத் தளத்தில் வெளியிட்டது. சிங்கப்பூர் தூதரின் கடிதத்தை வெளியிட அந்தச் சஞ்சிகை மறுத்துவிட்டது என்று அமைச்சு தெரிவித்தது.
விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்காக மும்முனை உத்தியை சிங்கப்பூர் அரசாங்கம் கடைப்பிடிப்பதாக தூதர் மிர்பூரி சுட்டினார். முதலில் விடுதி களில் கிருமிப் பரவலின் வேகத்தைக் குறைக்க சமூக இடைவெளி விதிமுறை, 2வதாக வேலை இடத்தில் மருத்துவக் கூடம்; மூன்றாவதாக தீவிரமான மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்றன.
இதுவரை ஒவ்வொரு 15 ஊழியர்களுக்கும் ஒருவர் சோதிக்கப்பட்டுள்ளார். முடிவில் எல்லா ஊழியர்களையும் சோதிப்பதே இலக்கு. இவற்றின் விளைவாக இலேசான அல்லது அறிகுறிகளே இல்லாத பலரும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இந்த அளவுக்குத் தங்கள் வெளிநாட்டு ஊழியர்களை மருத்துவ ரீதியில் பரிசோதித்து இருக்கும் நாடுகள் மிகவும் சொற்பமே என்பதை தூதர் சுட்டினார்.