மகாகவி பாரதியார் எழுதிய 'தேடிச்சோறு' கவிதையைப் பாடல் மூலம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அர்ப்பணம் செய்துள்ளார் பிரபல உள்ளூர் இசையமைப்பாளர் ஷபீர் தபாரெ ஆலம்.
கொவிட்-19 கிருமித் தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஊட்டும் நோக்கத்தில் அந்தக் கவிதைக்கு இசை வழங்கி, பாடி இசைக் காணொளியைத் தயாரித்துள்ளார் ஷபீர்.
'தி டெங் என்சாம்பல்' எனும் பிரபல உள்ளூர் சீன இசைக் குழுவுடன் இணைந்து இந்தத் தமிழ்ப் பாடலைத் தயாரித்துள்ளார் அவர். இசை வரிகளைத் தாம் எழுதியிருந்தாலும் சீன இசைக் குழுவினரே பாடலுக்கு இசையமைத்ததாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார் ஷபீர்.
"மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த முயற்சிக்கு தி டெங் என்சாம்பல் குழு ஆதரவு வழங்கினர். 'கொவிட் குடியேறியவர் ஆதரவு கூட்டணி' எனும் அடித்தளத்திலிருந்து எழுந்த குழுவும் இந்த முயற்சிக்குப் பக்க பலமாக இருந்தனர்," என்றார் ஷபீர்.
"மகாகவியின் வரிகளைப் பாடலாகக் கொண்டு வருவதால் அதை சரியாக செய்யவேண்டும். பாடலும் நல்லா இருக்கனும். கவிதையின் தன்மையும் குறையக்கூடாது," என்று இப்பாடலைத் தயாரிக்கும்போது அவர் மனதில் ஓடிய சிந்தனைகளைப் பற்றி அவர் கூறினார்.
இந்தக் காலக்கட்டத்திற்குத் தேவையான முயற்சியாக இதை வருணித்த ஷபீர், தமது குழுவினர், இணைந்து செயல்பட்டவர்கள் அனைவரும் இதற்காக இரவும் பகலுமாக உழைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த இசைக் காணொளியைப் பற்றி சிந்தித்து அதைத் தயாரிக்க கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் எடுத்ததாகவும் அவர் கூறினார்.
"என் வாழ்வின் சவால் நிறைந்த நேரத்தில் நான் மிகுந்த சோர்வுடன் இருந்தபோது தேடிச்சோறு கவிதையை வாசித்தேன். எனக்குள் வலிமை ஏற்பட்ட உணர்வு அப்போது எனக்குக் கிடைத்தது," என்று தனது தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்தார் ஷபீர்.
மேலும் செய்திகள் நாளைய தமிழ் முரசில்...