கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் முடிவடைந்து முதற்கட்ட கட்டுப்பாட்டுகள் இன்று தளர்த்தப்பட்டன. லிட்டில் இந்தியாவில் பெரியளவில் மாற்றங்கள் தென்படவில்லை என்றாலும் தற்போது வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.
வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு மே 25ஆம் தேதி வெளியிட்ட ஆலோசனையின்படி ஒரு குடும்பத்திலிருந்து அதிகபட்சம் ஐந்து உறுப்பினர்கள் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வழிபாட்டுத் தலங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
ஒரே நேரத்தில் ஐந்து குடும்பங்கள் மட்டுமே வழிபட முடியும். தற்போது முதற்கட்டமாக இந்துக் கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் போன்றவை தனிப்பட்ட வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டுள்ளன.
நீண்ட நாள் கழித்து ஆலயத்தினுள் செல்ல முடிவதை எண்ணி நிம்மதி அடைந்தனர் பக்தர்கள்.
“கிருமித்தொற்று பிரச்சினைக்கு முன்பு கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு வருவேன். நீண்ட நாள் கழித்து இப்போது வருவது மனதிருப்தி அளிக்கிறது. இந்த நாளுக்கு ஆவலாக காத்திருந்தேன்,” என்றார் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு அருகே வசிக்கும் திரு ரமேஷ் சந்திரா, 45.
‘சேஃப் என்ட்ரி’ என்ற மின்னிலக்க முறையில் பதிவு செய்வது உட்பட முகக்கவசம் அணிவது, காய்ச்சலுக்கான அறிகுறிகள் இல்லாமல் இருப்பது போன்ற பாதுகாப்பு வழிகாட்டிகளுக்கு இணங்கி வழிபாட்டுத் தலங்களுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படுகிறது.
பள்ளிவாசல்கள் நேற்று முதல் இம்மாதம் 7ஆம் தேதி வரை மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். இம்மாதம் 8ஆம் தேதி முதல் நாள்தோறும் ஐந்து வேளை தொழுகைக்காக அவை திறந்திருக்கும்.
வழக்கமான சேவைகளுக்கு அதிக வாடிக்கையாளர்கள்
லிட்டில் இந்தியாவில் பெரும்பாலான வர்த்தகங்கள் இன்னும் இயங்கவில்லை என்றாலும் மக்களுக்கு அதிக நம்பிக்கை வந்திருப்பதால், லிட்டில் இந்தியாவிற்கு அதிகமானோர் வரத் தொடங்கியுள்ளார்கள் என்று குறிப்பிட்டார் சரவண பவன் உணவகத்தில் பணியாற்றும் சமையற்காரர் திரு சிவானந்த மாதவன், 42.
“சில நாட்களுக்கு முன்பு வெஸ்டர்ன் யூனியனில் பணம் அனுப்ப வந்தபோது ஏறக்குறைய ஐந்து பேர் வரிசையில் காத்துகொண்டிந்தார்கள். இப்போது ஏறத்தாழ 15 பேர் வரிசையில் நிற்கின்றனர். சமூகத்தில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் குறைவதும் அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளும் மக்களுக்கு நம்பிக்கை தந்துள்ளது. அதனால் பலரும் லிட்டில் இந்தியாவிற்கு வருகிறார்கள்,” என்றார் மாதவன்.
முடிதிருத்தும் சேவைகள் முன்பு போல இப்போதும்
முடிதிருத்தும் சேவைகள் வழங்கப்பட்டாலும் அழகு பராமரிப்பு சேவைகள் வழங்க இன்னும் அனுமதி இல்லை.
மற்ற சேவைகள் இன்னும் முழுமையாக வழங்கப்படாத சூழலில் முடிதிருத்தகங்களிலும் வியாபாரம் மந்தமாக இருப்பதாக கடைக்காரர்கள் கூறினர்.
“கொவிட்-19 நோய்ப் பரவல், வியாபாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. பலரும் பொருட்கள் வாங்குவது, பணம் மாற்றுவது, சாப்பிடுவது என்று வரும்போதுதான் முடிதிருத்துதல், அழகு பராமாரிப்பு சேவை போன்றவற்றை நாடி வருவார்கள். பல கடைகள் மூடப்பட்டிருப்பதால் எங்கள் வியாபாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. பலரும் அழகு பராமரிப்புச் சேவைகளையும் கேட்டு வருகிறார்கள். ஆனால் முடிதிருத்தச் சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இரண்டாம் அல்லது மூன்றாம் கட்டத்தில் அரசாங்கம் வகுக்கும் வழிமுறைகளைப் பொறுத்துதான் அழகு பராமரிப்பு சேவைகளை மீண்டும் தொடர முடியும்,” என்றார் ‘நைஸ் பியூட்டி & ஹேர் சலூன்’ கடை உரிமையாளர் சித்ரா தேவி.
வெறிச்சோடிக் காணப்படும் லிட்டில் இந்தியா
நகைக்கடைகள், துணிக்கடைகள், பூக்கடைகள், நாணய மாற்று வணிகம், விமானப் பயண முகவைகள் போன்ற வர்த்தகங்கள் தொடர்ந்து மூடியிருக்கின்றன.