செங்காங் எம்ஆர்டி நிலைய வாசலில் ஆடவர் ஒருவரை வழிமறித்த காட்டுப் பன்றி ஒன்று, எம்ஆர்டி நிலையத்தின் கண்ணாடி கதவு ஒன்றை முட்டித் தள்ளியதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
கண்ணாடிக் கதவு உடைந்து சிதறியதைக் காட்டும் படத்தை ‘மதர்ஷிப்’ செய்தி இணையப்பக்கம் வெளியிட்டிருந்தது.
இந்த விபத்து எப்போது நிகழ்ந்தது என்று தெரியவில்லை. ஆனால், இன்று காலை பார்வையிடபோது செங்காங் எம்ஆர்டி நிலையத்தின் ஒரு கண்ணாடிக் கதவு பயன்பாட்டுக்கு இல்லாதபடி வேலியிடப்பட்டிருந்தது.
கதவை உடைத்துக்கொண்டு பன்றி எங்கே சென்றது என்பது தெரியவில்லை.
மனித நடமாட்டம் அதிகம் உள்ள இந்தப் பகுதிக்குள் காட்டுப்பன்றி எவ்வாறு வந்தது என்பதும் விந்தையாகவே உள்ளது. ஆங்கர்வேல், ஃபெர்ன்வேல், பொங்கோல் வட்டாரங்களில் உள்ள காட்டுப் பகுதிக்குள்ளிருந்து அது வந்திருக்கலாம்.
செங்காங்கில் உள்ள காம்பஸ்வேல் பேட்டையில் காட்டுப்பன்றி ஒன்று செல்வதைக் காட்டும் மற்றொரு காணொளியும் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்தது.
இவ்விரு காணொளிகளிலும் காணப்பட்டது ஒரே காட்டுப்பன்றியாக இருக்கலாம் என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online