சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையத்தையும் ஜோகூர் பாருவில் புக்கிட் சகார் ரயில் நிலையத்தையும் இணைக்கும் அதிவேக ரயில் சேவை (ஆர்டிஎஸ்) கட்டுமானம் பற்றிய பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தெரிவித்தார்.
அந்த ரயில் சேவை பேச்சுவார்த்தை தொடர்பிலான இறுதி காலக்கெடு ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பதால் இரு நாடுகளும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவும் சிங்கப்பூர் முன்வைத்துள்ள யோசனைகளில் மாற்றங்களை முன்மொழியவும் மலேசியாவுக்கு காலஅவகாசம் கொடுக்கும் வகையில் அந்த ரயில் திட்டம் சென்ற ஆண்டு ஏப்ரல் முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு வந்துள்ளது.
மலேசியாவும் சிங்கப்பூரும் கொவிட்-19 கிருமிக்கு எதிரான போராட்டத்தைத் தொடரும் நிலை யிலும் இதர பல முக்கிய பணிகள் குறித்த பேச்சுவார்த்தை தொடர் கின்றன என்று கூறிய அமைச்சர், இவற்றில் இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட புதிய ரயில் திட்டங்களும் அடங்கும் என்றார்.
சிங்கப்பூரையும் ஜோகூரையும் இணைக்கும் அதிவேக ரயில் சேவை தொடர்பான பேச்சுவார்த்தை இரவு நேரத்தில் கூட தொடர்ந்து நடந்து வருகிறது என்று திரு கோ கூறினார். பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் இரு நாட்டு அதிகாரிகளும் ஜூலை காலக்கெடுவை மனதில் கொண்டு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்றார் அவர். பேச்சுவார்த்தை மூலம் விரைவில் வெற்றி கிட்டும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர்-ஜோகூர் பாரு ரயில் சேவைத் திட்டம் பற்றி முதன்முதலாக 2010ல் அறிவிக்கப்பட்டது. பிறகு மூன்று தடவை அந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
அதனையடுத்து சென்ற ஆண்டு நவம்பர் மாதம் திரு கோ ஓர் அறிவிப்பு விடுத்தார். சிங்கப்பூர்-ஜோகூர் பாரு ரயில் திட்டம் தொடர்பில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இரு நாடுகளும் மூன்று உடன்பாடுகளில் கையெழுத்திட வேண்டி இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் காலக்கெடு நான்காவது தடவையாக ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த ரயில் வழித்தடத்தை 2024 டிசம்பர் 31க்குள் கட்டி முடிக்க 2018 ஜனவரியில் இரு தரப்பு உடன்பாடு கையெழுத்தானது. கட்டுமானப் பணி சென்ற ஆண்டு தொடங்க இருந்தது.