ஸ்ரீ ஶ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்குள் நுழைய முடியாத காலக்கட்டத்தில் 54 வயது கங்கா துரைசாமி அடிக்கடி வாசலில் மலர்களைச் சமர்ப்பிப்பார். தற்போது நடப்பில் இருக்கும் இரண்டாம் கட்ட தளர்வு நடவடிக்கையின்போது ஆலயத்திற்குள் தம்மால் இப்போது நினைத்த நேரத்திற்கு செல்ல முடிவது குறித்து மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தார் . “என் மனதிற்கு இக்கோயில் மிகவும் நெருக்கமானது,” என்றார் அந்தத் துப்புரவுப் பணியாளர்.
இவரைப் போலவே பக்தர்கள் பலர் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளைக் கொண்ட சூழலில் ஆலயத்திற்குள் சென்று தெய்வ தரிசனம் செய்தனர்.
இரண்டாம் கட்ட தளர்வு நடவடிக்கைகளுக்குப் பிறகு இந்து கோயில்களில் கூட்டங்கள் அதிகரித்திருப்பதாக இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது. இந்தத் தளர்வால் மிகவும் நிம்மதியாகவும் உற்சாகமாகவும் இருப்பதாக வெள்ளிக்கிழமையன்று வழிபாட்டுக்காகக் கோவிலுக்குச் சென்றுள்ள பக்தர்கள் கூறினர்.
நோய்ப்பரவலை முறியடிப்பதற்கான அதிரடித்திட்டம் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் நடப்பில் இருந்தபோது பொதுமக்கள் சுதந்திரமாகச் செல்ல முடியாத பல்வேறு பொது இடங்களில் ஆலயங்களும் ஒன்றாக இருந்தன. கூட்டுப் பிரார்த்தனைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் பக்தர்கள் பலர் ஆலயங்களின் ஃபேஸ்புக் நேரலைச் சேவை வழியாக தினசரி வழிபாடுகளைக் கண்டனர். “இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட பூஜைகளை எனது குடும்பத்துடன் பார்த்திருக்கிறேன். ஆனால் நேரடியாக கோவிலுக்கு வந்து வழிபடுவதைபோல் ஆகாது,” என்று 42 வயது ஷ்யாமவம் தெரிவித்தார்.
சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயம் போன்ற பெரிய கோவில்களில் வார இறுதி நாட்களில் காலை மற்றும் மாலை வேலைகளை சேர்த்து சுமார் 800 பேர் அளவில் வருவதாக இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி த. ராஜசேகர் தமிழ் முரசிடம் தெரிவித்தார். எண்ணிக்கை அதிகரித்தபோதும் ஆலயங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தி விழிப்புடன் இருப்பதாக அவர் கூறினார்.
"ஒரு நேரத்தில் கோயிலுக்குள் 50 பேரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் பாதுகாப்பான ஒரு மீட்டர் தூர இடைவெளியைக் கடைபிடிக்க கோவில் நிர்வாகிகள் பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். பாதுகாப்பு இடைவெளியை உறுதிசெய்ய மஞ்சள் ஒட்டிகள் தரையில் ஒரு மீட்டர் இடைவெளியில் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன், நுழைவாயிலில் வெப்பநிலை பரிசோதனை, நுழையும்போது 'சேவ் என்ட்ரீ'(safe entry) சேவை வழியாக பதிவு செய்வது, கைகளுக்கான கிருமிநாசினியை வழங்குவது ஆகிய முறைகள் நடப்பில் உள்ளன .பக்தர்கள், கோயில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்துகொள்ளவேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரண்டாம் கட்ட தளர்விற்கு பிறகு வழிபாட்டுத்தளங்கள் பின்பற்றவேண்டிய சில பாதுகாப்பு வழிமுறைகளை கலாசார, சமூக இளையர் அமைச்சு கடந்த வாரம் வெளியிட்டது. இந்த வழிமுறைகளின் அடிப்படையில்தான் இந்து அறக்கட்டளை வாரியம் செயல்படுவதாகக் கூறிய திரு ராஜசேகர், விதிமுறைகளை மதித்து நடக்கும்படி பக்தர்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டார். "கோயில் ஆலயங்களுக்குள் செல்லும் பக்தர்கள் தங்களது முகக்கவசங்களை தளர்த்துகின்றனர். இது மிக தவறான ஒன்று. அத்துடன், பக்தர்கள் பலர் கோவிலுக்கு வெளியே பாதுகாப்பான தூர இடைவேளை இல்லாமல் நின்று வழிபடுகின்றனர். இவ்வாறு செய்யாமல் அனைவரும் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கூடுதல் செய்தி: இந்து இளங்கோவன்
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online